கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலை, 4:00 மணிக்கு பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் துவக்கி வைத்து பேசினார். மாநில துணைத்தலைவர் வெங்கடேசன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன், மாநில துணைத்தலைவர்
மஞ்சுளா பேசினர்.
இதில், தமிழக முதல்வர், தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். காலைச்சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
மாவட்ட இணைச்
செயலாளர் சாந்தி, பொருளாளர் கனகவள்ளி உட்பட, 20க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.