பாலக்கோடு: பள்ளி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, பள்ளி வாகனங்களை ஆய்வு செய்ய அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பாலக்கோடு, காரிமங்கலம் சுற்று வட்டாரத்தில் செயல்பட்டு வரும், 38 தனியார் பள்ளிகளின், 260 வாகனங்களில், முதல் கட்டமாக, 85 வாகனங்கள், பாலக்கோடு தனியார் கல்லுாரி வளாகத்துக்கு வரவழைக்கப்பட்டு, பாலக்கோடு மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கிடுசாமி ஆய்வு செய்தார்.
இதில், பள்ளி வாகனங்களில் அவசரகால வழி, கண்காணிப்பு கேமரா மற்றும் ஜி.பி.எஸ்., கருவி, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, வாகனத்தின் தரை தளம், ஆகியவை சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், தீயணைப்பு கருவியை பயன்படுத்துவது குறித்து அனைத்து ஓட்டுனர்களுக்கு செயல்விளக்கமும், வாகனங்களில் தீப்பிடித்தால் எவ்வாறு அணைப்பது, ஹேன்ட் பிரேக்கின் பயன்பாடு, வாகனங்களை பாதுகாப்பாக இயக்குவது குறித்து டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
ஆய்வின்போது, குறைபாடுகளுடைய, 7 வாகனங்கள் கண்டறியப்பட்டு, அதன் குறைகளை நிவர்த்தி செய்து, ஒருவார காலத்திற்குள் மீண்டும் ஆய்விற்கு ஆஜர்படுத்த அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மீதமுள்ள வாகனங்களை, 2ம் கட்டமாக ஆய்வு செய்யப்படும் என்றும், இந்த ஆய்விற்கு வராத பள்ளி வாகனங்கள், பொதுச்சாலையில் இயக்குவது கண்டறியப்பட்டால், வாகனத்தை சிறைப்பிடித்து, கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆய்வின்போது, பாலக்கோடு இன்ஸ்பெக்டர் சுரேஷ் உடனிருந்தார்.