திருவண்ணாமலையில், இரிடியம் விற்பனை மோசடி தொடர்பான தகராறில், நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் நேற்று, நான்கு பேர் தகராறில் ஈடுபட்டிருந்தனர். போலீசார் அங்கு சென்று, விசாரணை நடத்தினர். இதில், இரிடியம் விற்பனை தொடர்பான தகராறு என்பது தெரிந்தது.
மேலும் விசாரணையில், ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் சீனிமுகமது, 41, என்பவருக்கு திருவண்ணாமலையை சேர்ந்த ரவி, 45, என்பவருடன் நட்பு ஏற்பட்டது.b அவரிடம், இரிடியம் விற்பனை செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என, சீனிமுகமது ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பிய ரவி, அவரிடம் பல லட்சம் ரூபாய் கொடுத்தார்.
இது போல, திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு மணிகண்டன், 43, மதுரை அன்பழகன், 52, ஆகியோரிடமும் பணம் பெற்று, சீனிமுகமது ஏமாற்றியது தெரிந்தது. இதையடுத்து, ஏமாற்றப்பட்ட மூவரும், சீனிமுகமதுவிடம் தகராறு செய்த நிலையில், நான்கு பேரையும், போலீசார் கைது செய்தனர்.