ஈரோடு:ஈரோடில் பட்டப்பகலில் ரவுடியை, மற்றொரு ரவுடிக் கும்பல், கத்தியால் குத்திக் கொலை செய்தது.
ஈரோடு வீரப்பன்சத்திரம் ஜான்சி நகர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ், 29. நேற்று முன் தினம் மதியம், 3:30 மணிக்கு கனிராவுத்தர் குளத்தில் இருந்து பி.பெ.அக்ரஹாரம் செல்லும் சாலையோரம் நான்கு பேர் சேர்ந்து, சந்தோஷை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பினர். அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
பி.பெ.அக்ரஹாரத்தை சேர்ந்த ஜின்னா, 30, என்பவருடன், சந்தோஷூக்கு முன் விரோதம் இருந்தது. மது குடித்து விட்டு வந்த சந்தோஷை வழிமறித்து, ஜின்னா தலைமையிலான நான்கு பேர் வாக்குவாதம் செய்துள்ளனர்.
அப்போது ஜின்னா, சூரிக்கத்தியால் சந்தோஷை சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். கொலைக்கு பயன்பட்ட சூரிக்கத்தி கைப்பற்றப்பட்டுள்ளது. கொலையான சந்தோஷ் மீது வீரப்பன்சத்திரம், சூரம்பட்டி ஆகிய போலீஸ் ஸ்டேஷன்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஜின்னா மீதும் அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருக்கின்றன.
சந்தோஷின் தம்பிகளான அழகிரி, லோகேஸ்வரன் மீதும் பல்வேறு வழக்குகள் உள்ளன. அழகிரி தற்போது சிறையில் உள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.