பெரம்பலுார்:அதிக வட்டி தருவதாக கூறி, 11 கோடி ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலுார் மாவட்டம், அணைப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் தனவேல், 42. திருச்சி மாவட்டம், லால்குடி அருகே, கள்ளிக்குடி கிராமத்தைச் சேர்ந்த தர்மலிங்கம், 57, அவருக்கு பழக்கமானார்.
இவர் வாயிலாக, தனவேலுக்கு கன்னியாகுமரி மாவட்டம், கடியப்பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயபால் பழக்கமானார்.
அவர், தோவாளை அருகே எறச்சகுளத்தில், 'ஜே.என்.எப்., வர்த்தகம்' என்ற நிறுவனம் வெளிநாட்டிற்கு உணவு பொருட்கள், காய்கறிகள் ஏற்றுமதி செய்வதாகவும், அதிக லாபம் இருப்பதாகவும், அந்நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக வட்டி தருவர் என்றும் ஆசை வார்த்தை கூறினார்.
நம்பிய தனவேல் மற்றும் பலர், 2022 பிப்., 11 முதல், பல தவணைகளாக, 11 கோடி ரூபாய் வரை நிறுவன முகவரான ஜெயபால், கணக்காளரான கன்னியாகுமரி மாவட்டம், எறச்சகுளம் விஷ்ணுபுரத்தைச் சேர்ந்த மதன் மனைவி ராதிகா, 28, மற்றொரு முகவர் தர்மலிங்கம் ஆகிய மூவரின் வங்கி கணக்குகளுக்கு அனுப்பினர்.
அதற்கான வட்டியை, அவர்கள் மாதந்தோறும் பெற்று வந்த நிலையில், 2022 செப்டம்பர் முதல் வட்டி தொகை வராததால், ஜெயபாலிடம் கேட்டுள்ளனர். சரியான காரணம் சொல்லாமல் அவர், தனவேல் போன்றோரின் மொபைல் போன் அழைப்பை தவிர்த்தார்.
முதலீட்டாளர்கள், பெரம்பலுார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிந்து, 23ம் தேதி ராதிகாவை கைது செய்தனர்.
தலைமறைவான தர்மலிங்கத்தை நேற்று கைது செய்தனர். ஜெயபாலை தேடி வருகின்றனர்.