நாமக்கல்,-''நிர்வாக அனுமதி வழங்கி பணிகளை தொடங்காத பஞ்., செயலாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,'' என, ஆய்வு கூட்டத்தில், கலெக்டர் உமா எச்சரித்தார்.நாமக்கல் மாவட்டம், புதுசத்திரம் பி.டி.ஓ., அலுவலகத்தில், பஞ்., நிர்வாக செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து செயல்படுத்துவது குறித்த ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது. கலெக்டர் உமா தலைமை வகித்தார்.கூட்டத்தில், ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம பஞ்., தலைவர்கள், செயலாளர்கள் பங்கேற்றனர். அதில், பஞ்., அளவில் நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் பற்றியும், காலதாமதத்திற்கான காரணம், பணிகளின் தற்போதைய நிலை, பணி முன்னேற்றம் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.தொடர்ந்து, கலெக்டர் உமா பேசியதாவது:பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை மற்றும் தெருவிளக்கு வசதி, பள்ளி சுற்றுச்சுவர் அமைத்தல், கழிவுநீர் கால்வாய் அமைத்தல், அங்கன்வாடி மையம் அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை பஞ்., நிர்வாகம் குறிப்பிட்ட காலத்திற்குள் தொடங்கி, விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.பஞ்.,ல் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நிலுவையில் உள்ள பணிகள், அதன் முன்னேற்றம் குறித்து, பி.டி.ஓ.,க்கள் ஆய்வு கூட்டம் நடத்தி, பணிகளில் தொய்வு ஏற்பட்டிருந்தால், பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தொடர்ந்து கள ஆய்வு செய்து பணிகளை கண்காணிக்க வேண்டும். நிர்வாக அனுமதி வழங்கி பணிகளை தொடங்காத பஞ்., செயலாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.பஞ்., தலைவர்கள், தங்கள் பஞ்.,ல், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, மற்ற பஞ்.,களுக்கு முன்னுதாரணமாக திகழும் வகையில் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், உதவி செயற்பொறியாளர் கணேஷ் பெருமாள், பி.டி.ஓ.,க்கள் சுந்தரம், அசோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.