'நாமக்கல்,-'வரும், 10ல், நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், 'தேசிய லோக் அதாலத்' நடக்கிறது' என, மாவட்ட முதன்மை நீதிபதி குணசேகரன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு, தமிழக சட்டப்பணிகள் ஆணைக்குழு அறிவுறுத்தல்படி, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், வரும், 10ல், 'தேசிய லோக் அதலாத்' நடக்கிறது. இதில், அறிவுசார் சொத்துரிமை, நுகர்வோர் வழக்குகள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளில், சமரசம் செய்து கொள்ளக்கூடிய குற்றவியல் வழக்குகள். காசோலை, வங்கி கடன், கல்வி கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து, விவாகரத்து தவிர்த்த மற்ற குடும்ப பிரச்னைகள், உரிமையியல் வழக்குகள் (நிலம், சொத்து, பாகப்பிரிவினை, வாடகை விவகாரங்கள்), விற்பனை, வருமானம் மற்றும் சொத்துவரி பிரச்னை போன்ற வழக்குகள் விசாரிக்கப்படும்.மக்கள் நீதிமன்றம் மூலம் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு, மேல்முறையீடு கிடையாது. இம்மன்றம் மூலம் முடித்துக்கொள்ளப்படும் வழக்குகளுக்கு, செலுத்தப்படும் நீதிமன்ற கட்டணம், முழுமையாக திருப்பி தரப்படும் வாய்ப்பும் உள்ளது. பொதுமக்கள் யாருக்காவது நீதிமன்றத்தில், மேலே குறிப்பிட்ட வழக்குகள் நிலுவையில் இருக்கும் பட்சத்தில், சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.