கரூர்,-மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், கவுண்டன்புதூர், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் மக்காச்சோளத்தை கரும்பு மற்றும் மஞ்சள் பயிரில் ஊடுபயிராகவும், தனிப் பயிராகவும் பயிரிட்டு வருகின்றனர். மக்காச்சோள கதிர் நன்றாக விளைந்ததும் கூலி ஆட்கள் மூலம் மக்காச்சோள கதிரை பறித்து நன்றாக உலரவைத்து எந்திரம் மூலம் மக்காச்சோளத்தை பிரித்து எடுக்கின்றனர்.பின், உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், அருகாமையில் சாலைப்புதுாரில் செயல்பட்டு வரும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கும் கொண்டு சென்று விற்பனை செய்து வருகின்றனர். வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு மக்காச்சோளத்தை வாங்கிச் செல்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வியாபாரிகள் வருகின்றனர். மக்காச்சோள மாவு தயாரிக்கும் மில்களுக்கும், மாடு, கோழி தீவனம் தயாரிக்கும் மில்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.இந்நிலையில் கடந்த வாரங்களில் கிலோ மக்காச்சோளம், 22 ரூபாய் விற்பனையானது.இந்த வாரம் வரத்து குறைவால் கிலோ மக்காச்சோளம், 24 ரூபாய் வரை விலை உயர்ந்துளளது. மக்காச்சோளம் விலை உயர்ந்துள்ளதால் மக்காச்சோளம் பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.