சாக்கடையில் விடப்படும் மனிதக்கழிவுகள்
துாய்மை திட்டத்திற்கு அதிகாரிகள் வேட்டு
கொடைக்கானல், மே 4-
திண்டுக்கல் மாவட்டத்தில் நகர், ஊராட்சி பகுதிகளில் திறந்தவெளி சாக்கடைகளில் விடப்படும் மனிதக்கழிவுகளால் சுகாதாரக் கேடு தலைவிரித்தாடுகிறது . இதன் மூலம் துாய்மை இந்தியா திட்டத்திற்கு அதிகாரிகள் வேட்டு வைப்பது தொடர்கிறது.
மாவட்டத்தில் பெரும்பாலான ஊராட்சி,நகர் பகுதிகளில் சாக்கடைகளில் மனிதக்கழிவுகள் விடப்படும் அவலம் நீடிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தனிநபர் கழிப்பறை, செப்டிக் டேங்க் அமைப்பதற்கு மானியங்கள் வழங்கப்பட்ட போதும் பல பகுதிகளில் இன்னும் திறந்தவெளியில் இயற்கை உபாதை புரிவது, வீடுகளில் கட்டப்படும் கழிப்பறைகளில் செப்டிக் டேங்க் வசதியின்றி அவற்றை நேரடியாக தெருவோர சாக்கடைகளில் விடும் அவல நிலை தொடர்கிறது.
கொடைக்கானல், தாண்டிக்குடி மலைப் பகுதி உட்பட பல பகுதிகளில் இதுபோன்ற சூழல் உள்ளது. முகம் சுளிக்கும் வகையில் உள்ள இது போன்ற செயல்கள் அரங்கேறுவதை தடுக்க அதிகாரிகள் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சுகாதாரக் கேட்டை ஏற்படுத்தும் இது போன்ற பிரச்னைகளை சீர் செய்ய மாவட்ட நிர்வாகம் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் திறந்தவெளி சாக்கடைகளில் விடப்படும் மனிதக்கழிவுகளை அகற்றுவதில் துாய்மை பணியாளர்களுக்கு ஏராளமான பிரச்னைகள் உள்ளன. இனிவரும் காலங்களில் அனைத்து வீடுகளிலும் செப்டிக் டேங்க் வசதியை ஏற்படுத்தி மனிதக்கழிவுகளை திறந்த வெளியில் விடப்படும் நிலையை தவிர்க்க வேண்டும்.
அபராதம் விதிக்கலாமே
பொதுவாக பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாத நிலையும், சமூக அக்கறை இல்லாத சூழலால் கழிப்பறைக்கு செப்டிக் டேங்க் வசதி ஏற்படுத்தாமல் திறந்தவெளி சாக்கடைகளில் விடுகின்றனர். இது போன்று ஈடுபடும் நபர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி செப்டிக் டேங்க் வசதியை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மீறும் பட்சத்தில் அவர்களுக்கு அபராதம் விதித்து இதை ஒழுங்கு படுத்தினால் மட்டுமே சாத்தியப்படும்.
- தினகரன், வில்பட்டி, கொடைக்கானல்.