திருப்பூர்: பொதுமக்களுக்கான சேவைகளை எளிமைப்படுத்தும் வகையில், வருவாய் கிராமத்துக்கு ஒரு 'இ-சேவை' மையம் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின், 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தில், ஒவ்வொரு அரசுத்துறையும், கணினிமயமாகி வருகிறது. பொதுமக்களுக்கான அரசு சேவைகள், ஆன்லைன் மூலம் வழங்கப்படுகின்றன. அதற்காக, 2016 முதல், பொது 'இ-சேவை' மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
அதேசமயம், ஒவ்வொரு மாவட்டத்திலும், கடைக்கோடியில் உள்ள வருவாய் கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு, அரசு சேவை கிடைப்பதில்லை; அதற்காக, தொலைதுாரத்தில் இருக்கும் 'இ-சேவை' மையம் சென்றுவருகின்றனர்.
பொதுமக்கள் சிரமத்தை குறைக்கவும், அரசு சேவைகளை விரிவுபடுத்தவும், வருவாய் கிராமத்துக்கு ஒரு 'இ-சேவை' மையம் செயல்பட வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது.
மின்னாளுமை முகமை அலுவலர்கள் கூறுகையில், 'கிராமம்தோறும், 'இ-சேவை' மையம் இருக்க வேண்டுமென அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்காக, தனியார் 'இ-சேவை' மையம் அமைக்க உரிமம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, கிராமப்புற தொழில் முனைவோர், மாற்றுத்திறனாளிகள், பெண்களுக்கு முன்னுரிமை அளித்து, உரிமம் வழங்கப்படுகிறது. புதிய உரிமம் பெற, https://tnesevai.tn.gov.in, https://tnega.tn.gov.in என்ற இணையதளங்களில், வரும் 30ம் தேதி வரை விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.