ராசிபுரம்: ராசிபுரத்தில், 16 தனியார் பள்ளி பஸ்களின் தகுதிச்சான்றை அதிகாரிகள் ரத்து செய்தனர்.
ராசிபுரம் தனியார் பள்ளி வளாகத்தில், ராசிபுரம் பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி பஸ்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். 33 பள்ளிகளை சேர்ந்த, 284 பஸ்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டன. இந்த ஆய்வில் துணை போக்குவரத்து ஆணையர் சுரேஷ், நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன், ராசிபுரம் மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் நித்யா உள்ளிட்ட அதிகாரிகள் பஸ்களை ஆய்வு செய்தனர்.
வேக கட்டுப்பாட்டு கருவி, அவசர உதவிக்கான ஜன்னல், படிக்கட்டு உள்பட பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனர். இதில், விதிமுறைகளை பின்பற்றாத, 16 பஸ்களின் தகுதிச்சான்றை ரத்துசெய்தனர்.
தொடர்ந்து டிரைவர், கண்டக்டர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். தீயணைப்பு துறையினர் தீயணைப்பான் கருவியை பயன்படுத்தும் முறை குறித்து செயல் விளக்கம் அளித்தனர். போக்குவரத்து துறை சார்பில் சாலையில் பாதுகாப்பான வாகனங்களை இயக்குவது குறித்து விளக்கினர். மேலும் டிரைவர்களுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டதுடன், எச்.ஐ.வி., மற்றும் இயன்முறை சிகிச்சை அளிக்கப்பட்டது.