திருச்சி: திருச்சி மத்திய சிறை வளாகத்தில், தையல் ஆசிரியை ஒருவர், 'போக்சோ' தண்டனை கைதியால் மானபங்கம் செய்யப்பட்டதை, சிறை அதிகாரிகள் மூடி மறைத்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழக சிறைகளில் தண்டனை கைதியாக உள்ளவர்கள் படிக்க, திருச்சி மத்திய சிறையில் ஐ.டி.ஐ., உள்ளது. இங்கு, கோவை மத்திய சிறையில், போக்சோ வழக்கில் தண்டனை பெற்ற திருமூர்த்தி, 25, என்பவர் உட்பட 35 தண்டனை கைதிகள், திருச்சி மத்திய சிறையில் தங்கி, தையல் வகுப்பு படிக்கின்றனர்.
அவர்களுக்கு, 45 வயது தையல் ஆசிரியை வகுப்பு நடத்தி வருகிறார். கடந்த, 1ம் தேதி காலை நடந்த வகுப்பிற்கு பின், பகல், 11:45 மணிக்கு கைதிகள் சாப்பிட சென்றனர்.
அப்போது, திருமூர்த்தி சாப்பாட்டை முடித்து முன்னதாகவே வகுப்பறைக்கு வந்தார். அங்கு தனியாக இருந்த ஆசிரியையின் வாயில் துணியை அடைத்து, மானபங்கம் செய்ய முயன்றார்.
அதிர்ச்சியடைந்த ஆசிரியை, திருமூர்த்தியிடம் இருந்து விடுபட்டு, தன்னை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து, 'குத்தி விடுவேன்' என மிரட்டினார். உடனடியாக கைதி, ஆசிரியையை விட்டு ஓடி, குளியல் அறையில் ஒளிந்து கொண்டார்.
சிறைத்துறை அதிகாரிகளிடம், இது குறித்து புகார் கொடுக்கச் சென்ற ஆசிரியையிடம், திருச்சி மத்திய சிறை கண்காணிப்பாளர் ஆண்டாள், 'இதனால் உங்களுக்கு தான் கெட்ட பெயர், அசிங்கம். அப்படியே விட்டு விடுங்கள்' என, கூறி உள்ளார்.
அங்குள்ள பெண் அதிகாரியும், ஆசிரியைக்கு ஆறுதல் கூட கூறாமல், புகார் கொடுக்கக் கூடாது என்பது போல மிரட்டி உள்ளார். இதனால், மனமுடைந்த ஆசிரியை, அங்கிருந்து சென்றார்.
பல்வேறு குற்ற பின்னணி கொண்ட ஆண் கைதிகளுக்கு, வகுப்பெடுக்கச் செல்லும் பெண் ஆசிரியைக்கு, உரிய பாதுகாப்பு அளிக்காமல் சிறைத்துறை மெத்தனமாக இருந்துள்ளது.
மேலும், தண்டனை கைதியின் குற்றச் செயலை மறைக்கும் விதமாக, சிறை அதிகாரிகள், பாலியல் கொடுமைக்கு ஆளான பெண் ஆசிரியையை புகார் கொடுக்க விடாமல் செய்தது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.