அவிநாசி:அவிநாசி ஒன்றியம், நடுவச்சேரியில், கால்நடை மருந்தகம் இல்லாததால், 5 கி.மீ., துாரத்திலுள்ள அவிநாசி அல்லது சேவூர் செல்ல வேண்டியுள்ளது. எனவே, நடுவச்சேரியில், கால்நடை மருந்தகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை கால்நடை வளர்ப்போர் முன்வைத்திருந்தனர்.
இது குறித்து, கால்நடை பராமரிப்புத்துறையினர் கூறியதாவது: ஏற்கனவே, கால்நடை மருத்துவமனை உள்ள இடத்தில் இருந்து, 8 கி.மீட்டருக்குள் புதிய கால்நடை மருத்துவமனை அமைக்க அனுமதியில்லை என்ற சூழல் இருந்தது. தற்போது, இந்த எல்லை, 5 கி.மீ., என சுருக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில், நடுவச்சேரியில் இருந்து, அவிநாசி மற்றும் சேவூர் கால்நடை மருத்துவமனைகள், 5 கி.மீட்டருக்குள் உள்ளன.
இதனால், நடுவச்சேரியில் கால்நடை மருந்துவமனை அமைக்க வாய்ப்பில்லை. அதேபோல், கால்நடை மருத்துவமனை அமையவுள்ள இடத்தில், நிர்ணயிக்கப்பட்ட அளவில் ஆடு, மாடு, எருமை, கோழி உள்ளிட்ட கால்நடைகளும் இருக்க வேண்டும். இருந்தபோதிலும், நடுவச்சேரியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, கால்நடை வளர்ப்போர், துறை துணை இயக்குனருக்கு கோரிக்கை விடுக்கலாம்.