கரூர்: கரூரில், மாவட்ட அரசு விளையாட்டு மைதானத்துக்கு செல்ல, அருகம்பாளையம் கிழக்கு பகுதி வழியாக செல்லும் சாலையில், கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு பின்புறம், 15 ஏக்கரில், ஒரு கோடியே, 96 லட்ச ரூபாய் செலவில், மாவட்ட விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டு கடந்த, 2013ல் திறக்கப்பட்டது. அதில் கால்பந்து, கைப்பந்து, கபடி, கோ-கோ, தடகளம் உள்ளிட்ட போட்டிகளுக்கு ஏற்ப விளையாட்டு மைதானம், மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகம், வீரர்கள் ஓய்வு அறை, கழிப்பிட வசதி, தங்கும் அறைகள் உள்ளன.
மாவட்ட விளையாட்டு மைதானத்துக்கு செல்ல வெள்ளியணை சாலையில் இருந்து தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் தான்தோன்றிமலை, ராயனுார், சுங்ககேட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில், அருகம்பாளையம் கிழக்கு பகுதி, தார்ச்சாலை வழியாக சென்று வாக்கிங் செல்கின்றனர். ஆனால், மைதானத்துக்கு செல்லும் வழியில், ஒரு கிலோ மீட்டர் துாரம் வரை, போதிய தெரு விளக்குகள் இல்லாத நிலை உள்ளது.
இதனால் அதிகாலை, மாலை நேரங்களில் வாக்கிங் செல்வோர் மற்றும் விளையாட்டு வீரர்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கரூர் கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்துக்கு செல்ல, அருகம்பாளையம் கிழக்கு பகுதி வழியாக, கூடுதல் தெரு விளக்குகள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.