திருப்பூர்;கடந்த நிதியாண்டில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, பின்னலாடை உள்ளிட்ட பொருட்கள், 36 ஆயிரத்து, 419 கோடி ரூபாய் அளவுக்கு, ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் தகவல் அடிப்படையில், மாநில அரசு, மாவட்டம் வாரியாக ஏற்றுமதி வர்த்தக விவரங்களை பராமரிக்கிறது. கடந்த நிதியாண்டுக்கான(2022-23) ஏற்றுமதி வர்த்தக விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த, 2021-22ம் ஆண்டில், இரண்டு லட்சத்து, 62 ஆயிரத்து, 323 கோடி ரூபாயாக இருந்த, தமிழகத்தின் ஏற்றுமதி வர்த்தகம், கடந்த நிதியாண்டில், மூன்று லட்சத்து, 26 ஆயிரத்து,711 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மாநில அளவில், காஞ்சிபுரம் முதலிடத்திலும், சென்னை இரண்டாமிடத்திலும் இருக்கிறது.
3வது இடத்தில் திருப்பூர்
பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபடும் திருப்பூர் மாவட்டம், மாநில அளவில் மூன்றாவது இடத்தில் தொடர்கிறது.
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த, 2021 - 22ம் ஆண்டில், 35 ஆயிரத்து, 834 கோடி ரூபாய் அளவுக்கு, ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த நிதியாண்டில்(2022---23), 36 ஆயிரத்து, 419 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இருப்பினும், முந்தைய ஆண்டில், 13.70 சதவீதமாக இருந்த திருப்பூரின் மாநில அளவிலான பங்களிப்பு, 11.10 சதவீதமாக குறைந்துள்ளது.
எந்தெந்த பொருட்கள் ஏற்றுமதி?
பருத்தி நுாலிழை 'டி-சர்ட்' வகைகள் - 8,396 கோடி ரூபாய்; குழந்தைகளுக்கான பருத்தி நுாலிழை பின்னலாடைகள் - 3,790 கோடி ரூபாய்; பாலியஸ்டர் உள்ளிட்ட, செயற்கை நுாலிழை 'டி-சர்ட்'கள் - 2,493 கோடி ரூபாய்; இரவு அணியும் பருத்தி நுாலிழை பின்னலாடைகள் மற்றும் பைஜாமா ஆடைகள் - 1,933 கோடி ரூபாய்; இரவு அணியும் சட்டைகள் மற்றும் பைஜாமா - 1,288 கோடி ரூபாய்; 'டி-சர்ட்' அல்லாத பனியன் துணியில் தயாரித்த சட்டை வகைகள் - 1,075 கோடி ரூபாய்; உல்லன் மற்றும் உரோமத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மதிப்பு கூட்டிய, குழந்தைகள் பின்னலாடைகள் - 806 கோடி ரூபாய்; பருத்தி நுாலிழையில் தயாரித்த 'டிரவுசர்'கள், 'ஷார்ட்ஸ்' கைகள்- 805 கோடி ரூபாய்; பருத்தி நுாலிழையிலான இதர பின்னலாடைகள் - 705 கோடி ரூபாய்; செயற்கை நுாலிழை உள்ளாடைகள் - 688 கோடி ரூபாய்க்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
மேலும், 14 ஆயிரத்து, 541 கோடி ரூபாய்க்கு இதர பின்னலாடை ரகங்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் 'ஆக்டிவேட்டட் கார்பன்' வகைகள், வேளாண் பொருட்கள் உள்ளிட்டவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.