மயிலாடுதுறை, : திருவாவடுதுறை ஆதீனம் பெயரில் போலியான செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்ட மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மயிலாடுதுறை எஸ்.பி., யிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம குத்தாலம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்தின் 24வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார்.
டில்லியில் புதிய பாராளுமன்றத்தில், திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து வழங்கிய செங்கோல் நிறுவப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் 24வது குருமகா சன்னிதானம், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் உட்பட தமிழகத்தில் இருந்து பல்வேறு ஆதீனங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் ஒரு தகவல் திருவாவடுதுறை ஆதீனம் பெயரில் வைரலாகி வருகிறது.
அதில் 'ஆட்சியாளர்கள் கையில் செங்கோலை ஒப்படைத்த ஒரு மண்டலத்திற்குள், துர் மரணங்கள் நிகழ்வது நல்லதல்ல. இது தவறானவர்கள் கையில் செங்கோல் ஒப்படைக்கப்பட்டதற்காக கடவுள் கொடுக்கும் செய்தியாக கூட இருக்கலாம்' என, கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தி, திருவாவடுதுறை ஆதீனம், பிரதமர் மோடி ஆகியோர் படங்களுடன் தனியார் 'டிவி' லோகோவுடன் வௌியிடப்பட்டுள்ளது.
இதனை அடுத்து ஆதீன பொதுமேலாளர் ராஜேந்திரன் மயிலாடுதுறை எஸ்.பி., நிஷாவிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரில், மதமோதலை உண்டாக்கும் வகையில் பொய்யான செய்தி வெளியிட்டுள்ள நபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.