விழுப்புரம் : விழுப்புரம் கோர்ட்டில் நடந்து வரும் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மீதான வழக்கின் விசாரணை, வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பெண் ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கின் விசாரணை, விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில், அரசு தரப்பு சாட்சிகள் 68 பேரிடம் விசாரணை நடந்து, கடந்த ஏப்ரல் 13ம் தேதி நிறைவடைந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., மற்றும் செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி., ஆஜராகினர்.
இந்த வழக்கில், அரசு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில், நேற்று முன்னாள் சிறப்பு டி.ஜி.பி., தரப்பு வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன் வைத்தனர். அவர்கள் கேள்வி எழுப்பிய வாதங்களுக்கு, அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், ரவிச்சந்திரன் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
இந்த வாதம், மாலையில் முடிந்ததும், நீதிபதி புஷ்பராணி, வழக்கின் விசாரணையை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும், அரசு தரப்பு, குற்றம் சாட்டப்பட்டவர்களின் தரப்பினர் ஆஜராகி, அவரவர் தெரிவித்த வாதங்களை, எழுத்துப் பூர்வமாக தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.