நாமக்கல்: நாமக்கல் அருகே, 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட, 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை, போலீசார் கைது செய்தனர்.
மோகனுார் ஒன்றியத்துக்குட்பட்ட வளையப்பட்டி, அரூர், ஆண்டாபுரம், பரளி, என்.புதுப்பட்டி, லத்துவாடி பஞ்., பகுதியில், தமிழக அரசின் தொழில்துறை மூலம், 700 ஏக்கர் பரப்பளவில், 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைக்கப்பட உள்ளது.
அதற்காக நிலம் கையகப்படுத்துவதற்காக அப்பகுதிகளில் அதிகாரி
கள் நிலங்களை அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 'சிப்காட்' தொழிற்பேட்டைக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டால், ஏராளமான விவசாய நிலங்களும், விவசாயமும் பாதிக்கப்படும் எனக்கூறி, அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'சிப்காட்' தொழிற்பேட்டை அமைப்பதை ரத்து செய்யக்கோரி, தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பொதுமக்களின் கருத்துக்களை கேட்காமல், அதிகாரிகள் தன்னிச்சையாக செயல்படுவதாக
விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில், 'சிப்காட்' தொழிற்பேட்டை திட்டத்தை கைவிடக்கோரி, விவசாய முன்னேற்ற கழகம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், 'சிப்காட்' எதிர்ப்பு குழுவினர் மற்றும் அப்
பகுதி விவசாயிகள், பொதுமக்கள் என, 100க்கும் மேற்பட்டோர், வளையப்பட்டி ஆர்.ஐ., அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாய முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ராம்குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து, ஆர்.ஐ., அலுவலகம் முன் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை கைது செய்து, தனியார் மண்டபத்தில் தங்க வைத்து, மாலையில் விடுவிக்கப்பட்டனர்.