விழுப்புரம்:பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மற்றும் மாணவிகளுக்காக 35 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பள்ளி மாணவர்களுக்கு 24, மாணவிகளுக்கு 5, கல்லுாரி மாணவர்களுக்கு 3, மாணவிகளுக்கு 3 விடுதிகளும் உள்ளன.
பள்ளி விடுதிகளில் 4ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவ, மாணவிகளும், கல்லுாரி விடுதிகளில் பட்டப் படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் படிப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவர்கள் ஆவர்.
அனைத்து விடுதிகளிலும் உணவு, தங்கும் வசதியும் அளிக்கப்படும். பத்தாம் வகுப்பு வரை பயில்வோருக்கு 4 இணைச் சீருடைகள் வழங்கப்படும்.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டிகள் வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் இயங்கும் விடுதிகளில் கம்பளி மேலாடைகள் வழங்கப்படும்.
விடுதிகளில் சேருவதற்கான தகுதிகளாக, பெற்றோர், பாதுகாவலரது ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்தபட்சம் 8 கி.மீ., துாரத்திற்கு மேல் இருக்க வேண்டும். இந்த துார விதி மாணவிகளுக்கு பொருந்தாது.
தகுதியுடையவர்கள் விடுதி காப்பாளர், காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பள்ளி விடுதிகளைப் பொறுத்தவரை சம்மந்தப்பட்ட விடுதி காப்பாளர், காப்பாளினியிடம் அல்லது மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வரும் 15ம் தேதி வரையிலும்; கல்லுாரி விடுதிகளுக்கு ஜூலை 15ம் தேதி வரையும் சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.