அணைக்கட்டு:வேலுார் அருகே, பாம்பு கடித்து குழந்தை இறந்த அல்லேரி மலை கிராமத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவால், ஆம்புலன்ஸ் வசதி செய்யப்பட்டது.
வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அல்லேரி மலை, அத்திமரத்துகொல்லை கிராமத்தைச் சேர்ந்த விஜி- - பிரியா தம்பதியின், 2 வயது பெண் குழந்தை தனுஷ்காவை மே 27-ல் பாம்பு கடித்தது. முறையான சாலை, மருத்துவ வசதியின்றி, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் குழந்தை இறந்தது.இதன் எதிரொலியாக, அல்லேரி மலைக்கு அவசர கால ஆம்புலன்சை உடனடியாக வழங்க, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
அதன்படி, அணைக்கட்டு பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து, அல்லேரி மலைக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்த ஜீப் வடிவிலான சிறிய, ஆம்புலன்சை, மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., நந்தகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கூறியதாவது:-
இதன் மூலம் அல்லேரி மலையில் உள்ளவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின் கீழே அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். இதன் மூலம், உயிரிழப்பு போன்ற அசம்பாவிதம் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.