ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரம் பகுதியில் அடுத்தடுத்து பெய்த மழையால் முருங்கை மகசூல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்ததால் விலை ஏறுமுகமாகஉள்ளது.
ஒட்டன்சத்திரம், கப்பலப்பட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, சாலைப்புதுார் , சுற்றுப்பகுதிகளில் முருங்கை அதிகமாக விளைவிக்கப்படுகிறது. கரும்பு முருங்கை, செடி முருங்கை, மரம் முருங்கை என மூன்று வகையாக காய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது
ஒட்டன்சத்திரம் சுற்று கிராமப் பகுதிகளில் அடுத்தடுத்து இடி, மின்னல், சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் முருங்கை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் முருங்கை செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்தன. முருங்கைப் பிஞ்சுகளில் மழைநீர் இறங்கியதால் காய்ந்தன. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு இதன் வரத்து மிகவும் குறைந்தது.
செடி முருங்கை விலை படிப்படியாக அதிகரித்து கிலோ ரூ.75க்கு விற்கிறது.
தொடர்மழையால் பாதிப்பு
பெரியசாமி, விவசாயி அரசப்பபிள்ளைபட்டி: 3 ஏக்கரில் முருங்கை நடவு செய்துள்ளேன். மழைக்கு முன் விளைச்சல் நன்றாக இருந்ததால் வரத்து அதிகரித்து கிலோ ரூ.12 க்கு விற்பனை ஆனது.
சில நாட்களாக அடுத்தடுத்து காற்றுடன் மழை பெய்து வருவதால் முருங்கை விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வரத்து குறைந்து மார்க்கெட்டில் விலை அதிகரித்து ரூ.75 க்கு விற்கப்படுகிறது. அடுத்து வரும் நாட்களில் தற்போதுள்ள முருங்கை பிஞ்சுகள் அறுவடைக்கு தயாராகிவிடும். அப்போது மீண்டும் விலை சரிய வாய்ப்புள்ளது, என்றார்.