ப.வேலுார்: ப.வேலுார் தினசரி வாழை மார்க்கெட்டில், வாழைத்தார் விலையில் சரிவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
ப.வேலுார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், 1,000 ஏக்கர் பரப்பளவில், வாழை பயிரிடப்பட்டுள்ளது. பூவன், ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட வாழை ரகங்கள் பயிரிடப்பட்டு, அவை விற்பனைக்காக, ப.வேலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள தினசரி வாழை மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு வரும் வியாபாரிகள், வாழைக்கு விலை நிர்ணயம் செய்து வாங்கி செல்கின்றனர். இங்கு விளையும் வாழைத்தார்கள், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கும், சேலம், கோவை, ஈரோடு, கரூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கும், தினந்தோறும் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தற்போது வாழை விலை சரிந்துள்ளது. கடந்த வாரம், 300க்கு விற்ற, பூவன் தார், தற்போது, அதிகபட்சமாக, 200 ரூபாய்க்கும்; 400க்கு விற்ற ரஸ்தாளி தார், 250 ரூபாய்க்கும் விற்பனையானது. மொந்தன் வாழைக்காய் ஒன்று, ஐந்து ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது, மூன்று ரூபாயாக குறைந்துள்ளது. இதற்கு வரத்து அதிகமானதும், வெயில் காலத்தில் வாழைப்பழ தோல்கள் கருப்பாக மாறிவிடுவதே காரணம் என, வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.