நாமக்கல்: 'போலி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்' என, நாமக்கல் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் துரைசாமி
எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், நெல், கரும்பு, மக்காச்சோளம், சோளம், பருத்தி, தென்னை, வாழை, மரவள்ளி, வெங்காயம் மற்றும் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இயற்கை விவசாயம் மற்றும் அங்கக வேளாண்மைக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது. விவசாயிகள், தாங்கள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு, அதிகளவில் இயற்கை உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், உயிர் உரங்கள் மற்றும் உயிரி பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.
உயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள் மற்றும் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள் (டிரைக்கோ விரிடி, சூடோமோனாஸ், மெட்டாரைசியம், பிவேரியா, டிரைக்கோகிரம்மா, கிரைசோபெர்லா) ஆகியவை, வேளாண் துறையின், அனைத்து வட்டார வேளாண் விரிவாக்க மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு, மானியத்தில் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதன் மூலம், நிலம் மற்றும் சுற்றுப்புறம் மாசுபடுவதை தவிர்ப்பதோடு, மண் வளத்தை மேம்படுத்துவதுடன், உற்பத்தி செலவையும் குறைக்கலாம். மேலும், நஞ்சில்லா உணவையும் மக்களுக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியும். அதனால், விவசாயிகள் வேளாண் துறை மூலம் தங்கள் வயல்களில் மண் பரிசோதனை செய்து பரிந்துரைக்கப்படும், அளவிற்கு மிகாமல் ரசாயன உரங்களை பயன்படுத்த வேண்டும்.
உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் வாங்கும்போது, உரிமம் பெற்ற உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனையாளர்களிடம், உரிய விற்பனை ரசீது பெற்று வாங்க வேண்டும். போலி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை செய்தாலோ அல்லது அதிக விலைக்கு விற்றாலோ, சம்பந்தப்பட்ட விற்பனை நிலையங்களின் உரிமம் ரத்து செய்யப்படும். இவ்வாறு அதில்
கூறப்பட்டுள்ளது.