திருப்பூர்:திருப்பூரில் அரிசி கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபரின் டைரி சிக்கியதால், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி விசாரணையில் இறங்கி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பள்ளிபாளையம் ரேஷன் கடையில், நேற்று முன்தினம் மாலை வரிசையில் நின்ற இளைஞர், விற்பனையாளரிடம், 100 கிலோ ரேஷன் அரிசி கேட்டுள்ளார். சந்தேகமடைந்த பொதுமக்கள், இளைஞரிடம் விசாரித்தனர்.
அவர் வைத்திருந்த மினி டைரியில், எந்தெந்த நாளில் யார், யாரிடமிருந்து எவ்வளவு ரேஷன் அரிசி வாங்கப்பட்டது; எவ்வளவு தொகை கொடுக்கப்பட்டது; டூ - வீலர் பெட்ரோல் செலவு, சாப்பாடு செலவு விபரங்கள் இடம் பெற்றிருந்தன.
அதிகபட்சம், 300 கிலோ வரை ரேஷன் அரிசியை வாங்கியது தெரிய வந்துள்ளது. கிலோவுக்கு, 7 ரூபாய் விலை நிர்ணயித்து, அரிசி வாங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் திரண்டதையடுத்து, இளைஞர் தப்பினார். இந்த தகவல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'ரேஷன் பணியாளர் பட்டியலை பெற்று, டைரி குறிப்புடன் ஆராயப்படும்.
ரேஷன் கடைகளில் அரிசி இருப்பு குறைந்திருப்பின், நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.