திருவண்ணாமலை:போதை கணவரை அடித்துக் கொன்ற மனைவியை, போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை அடுத்த அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரமேஷ், 46; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மகாலட்சுமி, 31. இவர்களுக்கு பெண் குழந்தை உள்ளது.
ரமேஷ் குடிப்பழக்கத்தால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த, 2-ம் தேதி அதிகாலை, முகத்தில் படுகாயங்களுடன் ரமேஷ், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார்.
திருவண்ணாமலை தாலுகா போலீசார் விசாரித்தனர். குடும்ப தகராறில், மனவேதனையடைந்த ரமேஷ் கட்டையால் தன்னைத்தானே முகத்தில் தாக்கிக் கொண்டதாக, மகாலட்சுமி கூறினார்.
அவர் மீது போலீசாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தால், தீவிர விசாரணை நடந்தது. அப்போது, தகராறில் ஆத்திரமடைந்த மகாலட்சுமி, கட்டையால் ரமேஷை தாக்கிக் கொன்றது தெரியவந்தது.
மகாலட்சுமியை, நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர்.