சேந்தமங்கலம்:கருவாட்டாறு தடுப்பணையை உடைத்த நபர் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை அடிவாரத்திலிருந்து நக்காறு, செட்டிகுளம், கருவாட்டாறு வழியாக பெரியகுளத்திற்கு தண்ணீர் சென்று, பழையபாளையம் ஏரிக்கு நீர் செல்லும்.
சேந்தமங்கலம் யூனியனுக்குட்பட்ட வாழவந்திகோம்பை பஞ்சாயத்தில் உள்ள கருவாட்டாறு பகுதியில், 30 ஏக்கர் பரப்பில் மா, தென்னை, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
கருவாட்டாறு தடுப்பணையில் நீர் தேங்கும் போது, அப்பகுதி விவசாய கிணறுகளின் நீர்மட்டம் உயர்ந்து, விவசாயம் செய்ய ஏதுவாக இருந்தது.
கடந்த, 2013ல் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கட்டப்பட்ட கருவாட்டாறு தடுப்பணையை இடித்து, தனி நபர் ஒருவர், அவரது தோப்பிற்கு லோடு வாகனம் செல்ல வசதியாக வழி ஏற்படுத்தி உள்ளார்.
இதற்காக பொக்லைன் மூலம், நேற்று முன்தினம் தடுப்பணையை உடைத்துள்ளனர். இந்த விவகாரம் அப்பகுதி விவசாயிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தடுப்பணையை உடைத்த நபர் மீது, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.