ராமநாதபுரம்:மீன்பிடி தடை காலத்தால் ராமேஸ்வரம் சுற்றுப்பகுதிகளிலிருந்து கருவாடு வரத்து குறைந்ததால் விலை கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.80 வரை உயர்ந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம், பாம்பன், குந்துகால் கடல் பகுதிகளிலிருந்து மீன்கள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இப்பகுதிகளில் கடலோரத்தில் மீன்களை உலர வைத்து கருவாடாக விற்பனைக்கு அனுப்புகின்றனர்.
மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை. நாட்டுப்படகுகளில் சிலர் மீன்பிடிக்கின்றனர்.
இதனால் தங்கச்சி மடம், பாம்பன், தேவிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கருவாடு வரத்து குறைந்து விலையும் உயர்ந்துள்ளது. உள்ளூரில் கிடைக்காததால் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதிகளிலிருந்து நெத்திலி மீன் கருவாடு வாங்கி வந்து ராமநாதபுரத்தில் விற்கின்றனர்.
சில மாதங்களுக்கு முன் கிலோ ரூ.300க்கு விற்ற நெத்திலி மீன் கருவாடு தற்போது ரூ.400 வரையிலும், இதே போல காரா, நகரை, பண்ணா, திருக்கை உள்ளிட்ட கருவாடுகள் சராசரியாக கிலோ ரூ.200க்கு விற்றது தற்போது கிலோவிற்கு ரூ.50 முதல் ரூ.80 வரை விலை உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக விற்பனை குறைந்துள்ளதால் வண்டி வாடகை, ஏற்றுக்கூலி, இறக்குகூலி போக போட்ட முதலீட்டை எடுப்பது சிரமமாக உள்ளது. அடுத்த மாதம் கருவாடு விலை குறைய வாய்ப்புள்ளது, என வியாபாரிகள் கூறினர்.