கரூர்: வெல்லம் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால், விவசாயிகள்
கவலையடைந்துள்ளனர்.
கரூர் மாவட்டம் நொய்யல், மரவாபாளையம், குளத்துப்பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், நல்லிக்கோவில், கொங்கு நகர், பேச்சிப்பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், விவசாயிகள் கரும்பு நடவு
செய்துள்ளனர்.
கரும்பை வெட்டி செல்வதற்காக, புகழூர் தனியார் சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்துள்ளனர். பதிவு செய்யாத விவசாயிகள், தங்களின் கரும்புகளை வெல்லம் தயாரிக்கும் ஆலைகளுக்கு டன் கணக்கில் விற்பனை செய்து வருகின்றனர்.
வாங்கிய கரும்புகளை, சாறு பிழிந்து பாகு காய்ச்சி அச்சு வெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் தயாரிக்கின்றனர். தயார் செய்யப்பட்ட வெல்ல சிப்பங்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல் பாளையத்தில் செயல்பட்டு வரும் வெல்ல ஏல சந்தைக்கும் கொண்டு சென்று விற்பனை செய்து
வருகின்றனர்.
இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கின்றனர். கடந்த வாரம், 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,290 ரூபாய்-க்கும், அச்சுவெல்லம், 1,370 ரூபாய்க்கும் விற்பனையானது. தற்போது, 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் ஒரு சிப்பம், 1,260 ரூபாய், அச்சு வெல்லம் ஒரு சிப்பம் 1,220 ரூபாய் விற்பனையானது. உற்பத்தி அதிகரிப்பால் வெல்லம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.