ஆத்துார்:தெடாவூரில், 3,000 ஆண்டுகள் பழமையான முதுமக்கள் தாழி, போர்க் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே தெடாவூரில் ஏகாம்பரநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு இரு ஆண்டுகளில், கல்வெட்டு மட்டுமின்றி கிராமத்தின், 10 இடங்களில் முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ளன.
கடைசியாக கடந்த, 25ல் முதுமக்கள் தாழி கிடைத்தது. சேலம் வரலாற்று ஆய்வு மைய தலைவர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்து வந்தனர்.
வெங்கடேசன் கூறியதாவது:
கல்வெட்டில், 'திரவேகம்பமுடையார் நாயனார்' என, குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஏகாம்பரநாத சுவாமி பெயரில் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
12ம் நுாற்றாண்டில் குலோத்துங்க சோழர் ஆட்சியில் இப்பகுதியை ஆட்சி புரிந்த வாணகோவரையன் காலத்தில், 3 கல்வெட்டு, 13ம் நுாற்றாண்டின் பாண்டியர் கால ஒரு கல்வெட்டு உள்ளன.
கோவிலுக்கு நிலம் தானம் வழங்கிய விபரம், சோழர் காலத்தில், 'மகதேசன்' எனும் அளவுகோல் மூலம் நிலத்தை அளக்கும் வழிமுறை குறித்து கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்க காலத்துக்கு முன், இறந்த மனிதனை முதுமக்கள் தாழியில் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்தது. இக்கிராமத்தில் ஏரி உள்ளிட்ட இடங்களில், 10 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன.
அவை, 3,000 ஆண்டுகள் பழமையானவை. இரு மாதங்களுக்கு முன் கிடைத்த, இரு முதுமக்கள் தாழிக்குள் சிவப்பு, கறுப்பு நிற பானை, கலயம், இரும்பு குறுவாள் எனும் போர்க்கருவிகள் உள்ளன.
இப்பகுதியில் மேலும் ஆய்வு செய்தால் பல்வேறு அரிய தகவல்கள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.