ராணிப்பேட்டை:ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன ஏஜன்டுக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு முதலீட்டாளர்கள் பூட்டு போட்டு, வீடு முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலுாரை தலைமையிடமாக கொண்டு இயங்கிய, ஐ.எப்.எஸ்., நிதி நிறுவனம், 1 லட்சம் ரூபாய் கட்டினால் மாதந்தோறும், 10 - 15 ஆயிரம் ரூபாய் வட்டி தரப்படும் என, கவர்ச்சி அறிவிப்பை வெளியிட்டது.
இதை நம்பி, ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலியைச் சேர்ந்த, 300-க்கும் மேற்பட்டோர், 200 கோடி ரூபாய் வரை முதலீடு செய்தனர்.
இந்நிறுவனத்தின் நெமிலி பகுதி ஏஜன்ட் ஜெகன்நாதன் மூலமாக, மக்கள் பணம் செலுத்தினர். திடீரென ஆறு மாதத்திற்கு முன், முதலீட்டாளர்களுக்கு பணம் தராமல் மோசடி செய்ததாக, அதன் நிர்வாகிகள் சிலர் கைது செய்யப்பட்டனர்.
நிறுவன முக்கிய நிர்வாகிகள் தலைமறைவால், பணத்தை திரும்ப தரக்கோரி முதலீட்டாளர்கள் போராடி வருகின்றனர்.
நெமிலியில், 100-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பணத்தை திருப்பி தரக்கோரி, நேற்று ஐ.எப்.எஸ்., நிதி நிறுவன ஏஜன்ட் ஜெகன்நாதனுக்கு சொந்தமான, திருமண மண்டபத்துக்கு பூட்டு போட்டனர்.
மேலும், நெமிலி ஆற்றோர தெருவில் உள்ள அவர் வீட்டின் முன், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நெமிலி போலீசார் பேச்சு நடத்தியும், தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.