வரமாக வருவாரா வருண்... *காயம் சாபம் தீருமா ,

துபாய்: 'டி-20' உலக கோப்பை தொடரில் சாதிக்க காத்திருக்கும் வருண் சக்ரவர்த்திக்கு, முழங்கால் காயம் தொல்லையாக உள்ளது.
ஐ.சி.சி., உலக கோப்பை 'டி-20' தொடர்(அக்.17--நவ.14) எமிரேட்ஸ், ஓமனில் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணியில் தமிழக 'சுழல் மாயாவி' வருண் சக்ரவர்த்தி இடம் பெற்றுள்ளார். தற்போது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக அசத்துகிறார். இதுவரை 13 போட்டியில் 15 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இருப்பினும் முழங்கால் காயத்தின் வலியால் அவதிப்படுகிறார். பி.சி.சி.ஐ., ஆலோசனையுடன் கோல்கட்டா அணியின் மருத்துவ குழுவினர் வருணுக்கு வலி நிவாரணி ஊசி செலுத்தி போட்டிகளுக்கு தயார்படுத்துகின்றனர். உலக கோப்பை போட்டிக்கு முன் வருண் முழு உடற்தகுதி பெற வேண்டும். ஏற்கனவே காயம் காரணமாக ஆஸ்திரேலியா(தோள்பட்டை), இங்கிலாந்து(முழங்கால்) தொடரில் இருந்து கடைசி நேரத்தில் நீக்கப்பட்ட அனுபவம் இவருக்கு உண்டு. இம்முறை காயத்தில் இருந்து மீள தவறினால் சகால் பக்கம் அதிர்ஷ்டம் அடிக்கலாம்.
இது குறித்து பி.சி.சி.ஐ., நிர்வாகி ஒருவர் கூறியது:
வருண் முழங்கால் காயத்தால் அவதிப்படுவது உண்மை. இவருக்கு வலி அதிகமாக உள்ளது. 'டி-20' உலக கோப்பை என்பதால், 'ரிஸ்க்' எடுத்து இந்திய அணியில் சேர்த்துள்ளனர். அக்.24ல் பாகிஸ்தானுக்கு எதிராக இவர் விளையாட விரும்புகிறோம். இவரை தயார் செய்ய பி.சி.சி.ஐ., மருத்துவ குழுவினர் 'ஓவர்டைம்' பணியாற்ற வேண்டும். நுாறு சதவீதம் உடற்தகுதி பெற நீண்ட கால சிகிச்சை தேவைப்படும். இப்போதைக்கு வலியில் இருந்து மீள வைப்பது தான் நோக்கம். கோல்கட்டா அணியின் மருத்துவ குழுவினர் வலி நிவாரணி ஊசி செலுத்துகின்றனர். இது தற்காலிகமாக வலியை குறைக்க மட்டுமே உதவும். பீல்டிங்கின் போது 'டைவ்' அடிக்கக் கூடாது, முழங்கால்களுக்கு அதிக அசைவு கொடுக்கக் கூடாது என கட்டுப்பாடுகளும் விதித்துள்ளனர்.
ஐ.பி.எல்., போட்டிகளில் 'பவுலிங்' செய்யாத தருணத்தில் வருண் வலியால் அவதிப்படுகிறார். இதை நீங்கள் 'டிவி'யில் பார்க்க முடியாது. இவரால் ஜடேஜா, கோஹ்லி போல் துடிப்பாக 'பீல்டிங்' செய்ய முடியாது. உலக கோப்பை தொடரில் 'ஷார்ட் பைன் லெக்' போன்ற அதிக சிரமம் இல்லாத இடத்தில் 'பீல்டிங்' செய்ய சொல்ல வேண்டும். ஒவ்வொரு போட்டியிலும் நான்கு ஓவர்களை தரமாக வீசினால் போதும்,''என்றார்.