அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., விரைவில் துவங்கும்: அமைச்சர் மகேஷ்
மயிலாடுதுறை: அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் விரைவில் துவங்கும் என, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
மயிலாடுதுறையில் உள்ள அறிவகம் குழந்தைகள் நல காப்பகத்தில் தங்கியுள்ள, பிறவியிலேயே இரண்டு கைகளும் இல்லாத மாணவி லட்சுமி, மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் உதவியுடன் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதி, 277 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார்.
அந்த மாணவியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், இளைஞர் நலத் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேற்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, மாணவி கால்களால் வரைந்த ஓவியங்களை அவர்களிடம் காண்பித்தார். அவருக்கு, அமைச்சர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
பின், அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:
மாணவியின் தன்னம்பிக்கையை பார்த்து, மற்ற மாணவர்களும் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். தேர்வில் தோல்வி அடைந்தாலும், மதிப்பெண் குறைந்தாலும் அதற்காக தற்கொலை செய்து கொள்ளும் முடிவை கைவிட்டு, லட்சுமி போல் நிமிர்ந்து நிற்க வேண்டும்.
மாணவி லட்சுமியின் உயர்கல்விக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்படும். மேலும், காப்பகத்திற்கு தேவையான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும்.
அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் எந்த நிதிச்சுமை இருந்தாலும் தொடர்ந்து நடத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். அதற்காக சிறப்பு ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் வகுப்புகள் தொடங்கும். இவ்வாறு, அமைச்சர் தெரிவித்தார்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!