
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, அரசு உயர்நிலைப் பள்ளியில், 1970ல் ஆசிரியையாக பணியாற்றிய போது ஒரு விசித்திர சம்பவம் நடந்தது.
அந்த பள்ளியில், இன்ஷியலுடன் பெயரின் முதல் எழுத்தை சொல்லித்தான் ஆசிரியர்களை அழைப்பர்; அதனால், ஆசிரியர்களின் முழுப்பெயர் மாணவர்களுக்கு தெரியாது.
என்னை, 'கேகே' என்பர்.
ஒரு விடுமுறை நாளில் வீட்டில் இருந்தேன். என் வகுப்பு மாணவன் திடீரென்று அங்கு வந்தான். பெரிய அரிவாளை துாக்கியபடி உடன்வந்த அவன் அப்பா, 'ஆசிரியை கேகே யாரு...' என்றார். வராந்தாவில் அமர்ந்திருந்த என் தந்தை, 'என் மகள் தான்...' என்றார்.
மிகுந்த சினத்துடன், 'எங்கே அவுங்க... ஒரே வெட்டு தான்...' என அரிவாளை ஓங்கியவரிடம், 'திடீர்ன்னு வெட்டறேன்னு சொல்றீங்களே... என்ன நடந்தது...' என்றார் என் தந்தை. ஆவேசத்துடன், 'என் பையனை, 10 நாளா வகுப்புக்குள்ள விடாம, வெளியிலே நிக்க வெக்கிறாங்களாம்...' என்றார்.
சத்தம் கேட்டு வெளியே வந்த என்னை கண்டதும் பதற்றமடைந்தான் மாணவன். அவசரமாக, 'அப்பா... இவங்க இல்ல... அது கணக்கு ஆசிரியை...' என தடுத்தான்.
மறுநாள் கணித ஆசிரியையிடம் விசாரித்தேன். வீட்டுப்பாடம் செய்யாமல் ஏமாற்றிய மாணவனை எச்சரித்து தண்டித்ததை கூறினார்.
அரிவாளுடன் வந்தவரை வீட்டுக்கு அழைத்து விவரத்தை கூறினேன். மனம் மாறியவர், 'டியூஷன் வைக்க வசதியில்லாத ஏழை நான்...' என கண் கலங்கினார்.
உருகிய என் தந்தை, 'நாளை முதல் உன் மகனை இங்க அனுப்பு... என் மகள் பாடம் சொல்லி தருவாள்; பணம் வேண்டாம்...' என்றார். பின், தேர்வுகளில், 80, 90 மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான் அந்த மாணவன்.
என் வயது, 72; இன்றும் அந்த சம்பவத்தை மறக்க முடியவில்லை.
- கல்யாணி ஸ்ரீதரன், சென்னை.

