
வாழ்த்துங்கள் வாழ்த்தப்படுவீர்கள்!
* வீழுகிற போது
கைகொட்டிச்
சிரிக்கிறவரிடையே
தூக்கி விடுவதற்காய்
நீட்டுகிற
கைகள்தான்
தேவனின் கரங்கள்!
* எழுகிற போதெல்லாம்
தலையில்
குட்டுகிறவர்களைக்
காட்டிலும்
தோளை
தட்டிக் கொடுப்பவர்கள்தான்
கடவுளின் காதலர்கள்!
* கொட்டிக் கிடப்பது
பணமாய் இருப்பினும்,
குப்பைதான்
உதவாதவரை...
தட்டில் இட்டது
கூழாய் இருந்தாலும்,
அமிர்தம்தான்
உழைப்பில் வர!
* அம்மாவின்
கண் மையை
கைகளில்
அப்பிக் கொண்டு
சுவர்களில்
அச்சுப் பதிக்கிற
குழந்தைதான்...
நீங்கள்
வாழ்த்துகிற போது
பிக்காசோவாகிறான்
வைகிற போதோ
பிசாசாய் ஆகிறான்!
* மகனின்
வராத மதிப்பெண்களுக்காக
வார்த்தைகளை
இறைப்பதை விட -
தேர்வில்
வாங்க வேண்டிய
மதிப்பெண்களுக்காக
அரவணைப்பது
அர்த்தமுள்ளது!
* எப்போதும்
உங்கள்
அலுவலக மேஜையை
சுத்தம் செய்து
செல்பவனைக் காட்டிலும்
இன்று
உங்கள்
பேனாக் கூண்டில்
ஒற்றை
ரோஜாவைச்
சொருகிப் போன
புதிய தொழிலாளியை
பாராட்டுங்கள்...
ரோஜா மலரும் அவனுள்ளும்!
* காலமெல்லாம்
தோழமையோடு...
கரம் கோர்த்து
இரண்டாவது
அவதாரமாய்
வலம் வருபவள்
மனைவி...
நகைப்பூச்சாய்
திரிகிற பெண்களிடையே
அவளின்
எளிமையான
நகப்பூச்சு மாற்றத்தைக் கூட
பாராட்டுங்களேன்...
முத்தங்கள் கூடும்!
* சிறியதோ
பெரியதோ
சாதனைகளல்ல முக்கியம்
சாதிக்க நினைக்கிற
முயற்சிகள்தான் முக்கியம்...
மாறுபடுகிற
எண்ணங்களே
மாற்றங்களை விதைக்கும்...
இனம் கண்டு
வாழ்த்துங்கள்
வாழ்த்துங்கள்...
வாழ்த்தப்படுவீர்கள்
வாழ்ந்த பிறகும்!
— முருகானந்தன், திருப்பூர்.

