PUBLISHED ON : ஜூன் 20, 2018

பொதுவாக பயிர் சாகுபடி உத்திகள் பல இருந்தாலும் நல்ல லாபம் தரும் மூலிகைகளை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் கட்டாயம் பிரத்யேக வழிமுறைகளை கையாள வேண்டும். குறிப்பாக தெரிவு செய்த நிலங்கள், பயிர் வளர்ச்சியை பாதிக்கும் முக்கிய காரணிகளான உப்புத்தன்மை, அமிலத்தன்மை அல்லது நச்சுத்தன்மை இல்லாதவாறு இருக்க வேண்டும். தேர்வு செய்த இடம் கல்லறைகள், பிணம் எரிக்கும் இடங்களுக்கு அருகில் இருக்கக்கூடாது.
இத்தகைய இடங்களில் மண்வளம் கடுமையாக சிதைக்கப்பட்டிருக்கும். தீ வைத்த மண் கண்டத்தில் எந்த பயிரும் முறையாக வளராது. மண்ணின் முக்கிய பவுதீக குணங்களான நீர்ப்பிடிப்பு திறன், மண் செறிவு மற்றும் உயிர் தன்மை அதிகம் உள்ளதாக, களைகள் பெருக்கம் குறைவாக உள்ளதாக இருப்பதும் மிக முக்கியம்.
உர மேலாண்மை
பொதுவாக மண் வளம் சேர்க்கும் உயிர் உரங்கள், இயற்கை உரங்கள் இட்ட வயல் சிறந்தது. பொதுவாக ஆரம்ப காலகட்டமான 20 முதல் 30 நாட்கள் கடும் களைகள் வராதவாறு நிலத்தை முன் கூட்டியே உழவு செய்து தயார் செய்தல் அவசியம்.
முக்கியமாக மண் மற்றும் நீர் மாதிரிகளை முறையாக சேகரித்து அந்த சத்து தேவையினை அறிந்து உரம் இட முனைய வேண்டும். மண்வளம் பேணிய பகுதியில் தான் நலமாக பயிர் வளரும் சூழலும், சத்துக்கள் முழுமையாக நிரம்பிய மூலிகை பயிரும் கிடைக்கும்.
நிச்சயமாக நகர்புறத்தில் உள்ள கழிவுகள் மூலம் கிடைத்த கம்போஸ்ட் உரத்தை மூலிகை பயிர்களுக்கு பயன்படுத்தக்கூடாது. பசுஞ்சாணம் அல்லது ஆட்டுப்புழுக்கையை நேரடியாக இடக்கூடாது.
சாகுபடி நுட்பம்
மட்காத மிருக கழிவுகள் மட்டுமல்லாது மட்க வைத்த மனித கழிவுகளையும் மூலிகை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தக்கூடாது. கிராமங்களில் பல பகுதிகளில் செய்யும் முக்கிய தவறான, மனிதர்கள் உள்ளே புகுந்து மலம் கழித்திடவும் அனுமதிக்க கூடாது. மூலிகை பயிரின் எந்த பகுதியை பயன்படுத்த நேர்ந்தாலும் அவற்றை பாதிக்கும் விஷயங்களை கண்டு தவிர்க்க வேண்டும்.
மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பும் போது அவற்றின் சத்து வேறுபாடுகள் மட்டும் அல்ல, அவை விஷமாக கூட மாறிட வாய்ப்பு உள்ளதால் மருந்தாக பயன்படும் மூலிகைகள் சாகுபடி செய்ய விரும்புவோர் முறையான தொழில் சாகுபடி செய்ய வேண்டும். தொழில்நுட்ப ஆலோசனைகள் பெற்றே சாகுபடி செய்ய வேண்டும்.
ஆலோசனைக்கு 98420 07125.
- டாக்டர் பா.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர்
தேனி.

