PUBLISHED ON : நவ 13, 2019

பொதுவாக பயிர் சாகுபடி பல இருந்தாலும் நல்ல லாபம் தரும் மூலிகைகளை சாகுபடி செய்ய விரும்பும் விவசாயிகள் கட்டாயம் பிரத்யேக வழிமுறைகளை கையாள வேண்டும். குறிப்பாக தெரிவு செய்த நிலங்கள் பயிர் வளர்ச்சியை பாதிக்கும் முக்கிய காரணிகளான உப்புத்தன்மை, அமிலத்தன்மை அல்லது நச்சுத்தன்மை இல்லாதவாறு இருக்க வேண்டும். மேலும் தேர்வு செய்த இடம் கல்லறைகள், மயானங்கள் அருகாமையில் இருக்கக்கூடாது. இத்தகைய இடங்களில் மண் வளம் கடுமையாக சிதைக்கப் பட்டிருக்கும். தீ வைத்த மண் கண்டத்தில் எந்த பயிரும் முறையாக வளராது.
மண்ணின் முக்கிய பவுதீக குணங்களான நீர்ப்பிடிப்பு திறன், மண் செறிவு மற்றும் உயிர்த்தன்மை அதிகம் உள்ளதாக களைகள் பெருக்கம் குறைவாக உள்ளதாக இருப்பது மிக முக்கியம். பொதுவாக மண் வளம் சேர்க்கும் உயிர் உரங்கள், இயற்கை உரங்கள் இட்ட வயல் சிறந்தது. பொதுவாக ஆரம்ப கால கட்டமான 20 முதல் 30 நாட்கள் கடும் களைகள் வராதபடி நிலத்தை முன் கூட்டியே உழவு செய்து தயார் செய்தல் வேண்டும்.
முக்கியமாக மண் மற்றும் நீர் மாதிரிகளை முறையாக சேகரம் செய்து அந்த சத்துத் தேவையினை அறிந்து உரம் இட வேண்டும். மண் வளம் பேணிய பகுதியில் தான் நலமாக பயிர் வளரும் சூழலும் சத்துக்கள் முழுமையாக நிரம்பிய மூலிகை பயிரும் கிடைக்கும்.
நகர்ப்புறத்தில் உள்ள கழிவுகள் மூலம் கிடைத்த கம்போஸ்ட் உரத்தை மூலிகை பயிர்களுக்கு பயன்படுத்தக்கூடாது. பசும் சாணத்தையோ அல்லது ஆட்டுப் புழுக்கைகளையோ நேரடியாக இடக்கூடாது.
மட்காத மிருக கழிவுகள் மட்டுமல்லாது மட்க வைத்த மனிதக் கழிவுகளை மூலிகை பயிர் சாகுபடிக்கு பயன்படுத்தக்கூடாது. மேலும் மூலிகை தோட்டங்களில் மனிதர்கள் உள்ளே புகுந்து மலம் கழித்திடவும் அனுமதிக்கக் கூடாது. மூலிகை பயிரின் எந்தப் பகுதியை பயன்படுத்த நேர்ந்தாலும் அவற்றை பாதிக்கும் விஷயங்களை கண்டு தவிர்க்க வேண்டும். மாதிரிகள் சேகரம் செய்து ஆய்வுக்கு அனுப்பும் போது அவற்றின் சத்து வேறுபாடுகள் மட்டும் அல்ல அவை விஷமாக கூட மாறிட வாய்ப்பு உள்ளது. மருந்தாக பயன்படும் லாபம் தரும் மூலிகைகள் சாகுபடி செய்ய விரும்புவோர் முறையான தொழில்நுட்ப ஆலோசனை பெற்றே சாகுபடி செய்ய வேண்டும்.
- டாக்டர்.பா.இளங்கோவன்
வேளாண் துணை இயக்குனர்
தேனி
98420 07125

