/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
"வான் கோழி வளர்த்து வளம் காணலாம்'
/
"வான் கோழி வளர்த்து வளம் காணலாம்'
PUBLISHED ON : மார் 21, 2012
இன்று அசைவ பிரியர்கள் அதிகம் பேர் சுவைப்பது கோழி வகையைத்தான். இவற்றில் வான்கோழியின் சுவை தற்போது உணவுப் பிரியர்களை அதிகம் ஈர்த்து வருகிறது. இதனால் விவசாயிகள் வான்கோழி வளர்ப்பில் அக்கறை காட்டினால், அவர்களது வாழ்வு வளம் காணும் என்பதில் சந்தேகமில்லை. இதனாலேயே வான்கோழி வளர்ப்பிற்கு கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் திட்டமிட்டுள்ளது.
வான்கோழியின் தாயகம் தென் அமெரிக்கா. இது பிறநாடுகளிலும் பரவி, தற்போது ஹாலந்து வெள்ளை, பிரான்ஸ் பெல்ட்ஸ்வில்லி, நார்கான்செட், பார்பான் சிவப்பு, ஸ்லேட், நார்போக் என பலபெயர்களில் அழைக்கப்படுகிறது. பிற இனங்களைவிட விரைந்த வளர்ச்சி காணும் இவற்றிற்கு குறைந்த தீவனம் போதுமானது. ஒரு வான்கோழி மாதம்தோறும் 12 முட்டைகள் இடும்.
மேற்கூறிய இனங்களில் பிரான்ஸ் பெல்ட்ஸ்வில்லி நம்நாட்டுக்கு ஏற்ற வகையாக கருதப்படுகிறது. இவற்றிற்கான கொட்டகையை அமைக்க காற்றோட்டமான இடம் தேவை. சிமென்ட் தரையுடன், காகிதம், மரத்தூள், நிலக்கடலை தோல், நெல்உமியை தரைமீது 6 அங்குலம் உயரத்திற்கு பரப்ப வேண்டும். ஆண்கோழிக்கு 5 சதுர அடி, பெண் கோழிக்கு 4 சதுர அடி இடவசதி தேவை. வளர்ந்த கோழிக்கும், குஞ்சு வளர்க்கவும் தனி கொட்டகை தேவை.
பொதுவாக வான்கோழி 6 முதல் 7 மாத பருவத்தில் முட்டையிடும். அடைகாலம் 28 நாட்கள். புரூடர் எனப்படும் அடைகாப்பானில் இளம் குஞ்சுகள் பொரித்ததில் இருந்து 3 வாரம் செயற்கை வெப்பம் அளிக்கப்படும். இக்கோழிகள் விரைவாக வளர்வதால் குஞ்சு பொரித்த நாள் முதல் புரதச் சத்துடன் கூடிய தீவனம் தேவை. அடர்தீவன வகை யான மக்காச்சோளம், கம்பு, கடலை புண்ணாக்கு, சோயா புண்ணாக்கு, மீன்தூள், கோதுமை, அரிசிதவிடு, தாது உப்பு அளிக்கப்படும்.
இந்த கோழிகளை பொறுத்தவரை விவசாயிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. மார்க்கெட்டிங்கில் எளிய வழிமுறை இல்லாததே இதற்கு காரணம். கால்நடை பல்கலை ஆராய்ச்சி மைய அலுவலர்கள் கூறுகையில், ''அனைத்து சீதோஷ்ண நிலையிலும் வளரும் இயல்புடையது வான்கோழி. கோவா, பெங்களூருவுக்கு வான்கோழி இறைச்சி அதிகம் தேவைப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு ரூ. 300 விலை கிடைக்கிறது. உள்ளூரில் விழாக்காலங்களில் பிரியாணி செய்ய வான்கோழி கொள்முதல் அதிகம் நடக்கிறது,'' என்றனர்.

