ரயிலில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஆயுர்வேத கல்லுாரி மாணவர்கள்
ரயிலில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த ஆயுர்வேத கல்லுாரி மாணவர்கள்
ADDED : ஜூலை 08, 2026 11:12 PM
- நமது நிருபர் -: ஹாசனில் இருந்து வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ரயிலில், கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதால், அதே ரயிலில் பயணித்த ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த ஆயுர்வேத கல்லுாரியின் முதுகலை மாணவர்கள் மூவர், பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர். தற்போது அந்த பெண்ணும், குழந்தையும் நலமாக உள்ளனர்.
வாரணாசியில், பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில், தேசிய மனநல மருத்துவ மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, ஹாசன் மாவட்டத்தின் எஸ்.டி.எம்., ஆயுர்வேத கல்லுாரியின் மனநல மருத்துவம் மற்றும் உளவியல் துறையின் முதுகலை மாணவர்களான பெண் டாக்டர்கள் ரஷ்மி பிலாகி, ஷாஹின், லதாஸ்ரீ ஆகியோர், கடந்த 5ம் தேதி ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.
ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகே செல்லும் போது, இவர்கள் பயணித்த அதே பெட்டியில் பயணித்த கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
அவர் கர்ப்பமாக இருந்தபோது, மருத்துவ பரிசோதனைக்கு சென்ற போது, 'இயற்கை முறையில் பிரசவிப்பது கடினம்; அறுவை சிகிச்சை மூலமே குழந்தையை வெளியே எடுக்க முடியும்' என, மகப்பேறு டாக்டர்கள் கூறியிருந்தனர்.
அந்த பெண்ணுக்கு பிரசவ வலி அதிகரித்ததை அடுத்து, அந்த ரயில் பெட்டி பரபரப்பானது. அதை அறிந்த மூன்று டாக்டர்களும், தங்களை அந்த கர்ப்பிணியிடம் அறிமுகம் செய்து கொண்டனர்.
இருக்கைக்கு நடுவே அப்பெ ண்ணை படுக்க வைத்து, பிரசவம் பார்த்தனர். குழந்தையின் தலை வெளியே வந்தபோது, தாயின் தொப்புள் கொடி, குழந்தையின் கழுத்தை இறுக்கமாக சுற்றி இருந் தது.
மனம் தளராத டாக்டர்கள், கவனமாக தொப்புள் கொடியை அகற்றி, குழந்தையை பாதுகாப்பாக வெளியே எடுத்தனர்.
ஆனாலும், பதற்றம் குறையவில்லை. காரணம், குழந்தை அழவே இல்லை. உடனடியாக, குழந்தைக்கு முதலுதவி செய்தனர். சில விநாடிகளில், குழந்தையின் அழுகுரல் கேட்டு, தாய் ஆனந்த கண்ணீர் சிந்தினார்.
இது குறித்து, ரயில் நிலையத்தின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் தாயும், குழந்தையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
உரிய நேரத்தில் இரு உயிர்களை காப்பாற்றிய டாக்டர்களின் சேவையை, ரயிலில் பயணித்தவர்கள் பாராட்டினர்.
