ADDED : ஏப் 21, 2024 11:09 PM

பாலக்காடு : பாலக்காட்டில் சங்கர மடத்திற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடம், நாடு முழுதும் சங்கர மடங்களை ஏற்படுத்தி, வேதங்கள், தர்ம சாஸ்திரங்கள், கலாசாரம் மற்றும் நெறிமுறைகளை கற்றுக்கொடுத்து வருகிறது. கேரளாவில், ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தின் கீழ் உள்ள காலடியில் ஆதி சங்கர கீர்த்தி ஸ்தம்பம் உள்ளிட்ட இடங்களில் வேத பாடசாலைகள் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் ஆசியுடன், கேரளாவில் பாலக்காடு, கல்பாத்தி சாத்தபுரத்தில் சங்கர மடம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, பாலக்காடு காஞ்சி காமகோடி பீடம் சங்கராச்சார்யா சேவா சமிதி அறக்கட்டளை வாயிலாக, நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதற்கான பூமி பூஜை, நேற்று கல்பாத்தி சாத்தபுரம் அக்ரஹாரத்தில் காலை, 8:00 முதல் 9:00 மணி வரை நடைபெற்றது.
காஞ்சி காமகோடி மேலாளர் வைத்தியநாதன், காஞ்சி காமகோடி அக்னி கோத்திர பாதுகாப்பு சபை செயலர் பாலகிருஷ்ணன், காஞ்சி காமாட்சி கோவில் முக்கிய புரோகிதர் ஷ்யாம சாஸ்திரி, காஞ்சிபுரம் சந்திரசேகர கனபாடி, பாலக்காடு காஞ்சி சங்கர சேவா சமிதி அறக்கட்டளை செயலர் ராமசுப்பிரமணியம் ஆகியோர் தலைமையில் பூமி பூஜை நடந்தது.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற கோவை அத்வைத் லட்சுமி இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக இயக்குனர் ரவிஷாம் திருவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
கோவையைச் சேர்ந்த பட்டய கணக்காளர் சுப்பிரமணியன், சாத்தபுரம் சமூக செயலர் முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

