ADDED : மார் 22, 2024 01:50 AM

பெங்களூரு, கர்நாடகாவைச் சேர்ந்தவர், மத்திய விவசாய துறை இணை அமைச்சர் ஷோபா. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு இவர் அளித்த பேட்டியில், 'தமிழகத்தைச் சேர்ந்தவர்கள், எங்கள் கர்நாடகா ஹோட்டலில் வெடிகுண்டுகளை வைக்கின்றனர்.
'அவர்கள் மீது, கர்நாடக காங்., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' எனக் கூறியிருந்தார்.
அமைச்சரின் பேச்சுக்கு, தமிழகத்திலும், கர்நாடக வாழ் தமிழர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கடும் எதிர்ப்பு கிளம்பியதால், தமிழர்களிடம் ஷோபா மன்னிப்பு கோரினார்.
அவரது பேச்சு, தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் என, டில்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷனில் தி.மு.க., புகார் அளித்தது.
இதை பரிசீலித்த தலைமை தேர்தல் கமிஷன், ஷோபா மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படியும், 48 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படியும் கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து, பெங்களூரு தேர்தல் அதிகாரி, காட்டன்பேட்டை போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார்.
புகாரின்படி, தேர்தல் பிரசாரத்தின் பின்னணியில் வெறுப்பூட்டும் பேச்சுகளை பேசுவது, வெவ்வேறு சமூகங்களுக்கு இடையே வெறுப்பை துாண்டும் வகையில் பேசுவது ஆகிய பிரிவுகளின் கீழ், ஷோபா மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

