பெலகாவி தாலுகா அலுவலகத்தில் குடை பிடித்து செல்லும் மக்கள்
பெலகாவி தாலுகா அலுவலகத்தில் குடை பிடித்து செல்லும் மக்கள்
ADDED : ஜூலை 25, 2024 11:04 PM

பெலகாவி: பெலகாவி தாலுகா அலுவலகத்தில் மழை நீர் கசிவதால், பொது மக்கள் குடை, மழை கோட் அணிந்து செல்ல வேண்டிய நிலை அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
பெலகாவியில் 65 ஆண்டுகள் பழமையான கட்டடத்தில் தாலுகா அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் 'பெலகாவி ஒன் மையம்', மேல் தளத்தில் மாஜிஸ்திரேட் அலுவலகம் அமைந்து உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இச்சூழ்நிலையில், பெலகாவியில் கடந்த பத்து நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கட்டடத்தின் மேற்கூரையில் கசிவு ஏற்பட்டுள்ளது. தாழ்வாரத்தில் தண்ணீர் தேங்கி உள்ளது.
அலுவலகத்துக்கு வரும் பொது மக்கள், குடை பிடித்தபடியும், மழைகோட் அணிந்தபடியும் வருகின்றனர். தரையில் தண்ணீர் தேங்கி உள்ளதால், முதியவர்கள், பெண்கள் வழுக்கி விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளன. மழைநீர் கசிவால், கட்டடத்தின் சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இங்கு பணியாற்றும் ஊழியர் ஒருவர் கூறுகையில், 'பெண் ஊழியர்கள், கழிவறைக்கு செல்ல தண்ணீரில் நடக்க வேண்டி உள்ளது. ஆனால் கழிவறைக்குள் தண்ணீர் தேங்கி, சொல்ல முடியாமல் தவிக்கின்றனர். தாலுகா பிரச்னைகளை நாங்கள் தீர்த்து வைப்போம். ஆனால் எங்களுக்கு ஏற்படும் பிரச்னையை சொல்ல முடியாத நிலையில் உள்ளோம்' என்றார்.
தாசில்தார் பசவராஜா கூறுகையில், ''தற்போது இயங்கி வரும் இந்த அலுவலகம், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட இடத்தில் அமைந்து உள்ளது. 2012ல் இங்கு தாலுகா அலுவலகம் மாற்றப்பட்டது.
''இது தொடர்பாக உயர் அதிகாரிகள், மாநகராட்சி கமிஷனர் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். முடிந்தவரை சீரமைப்போம். விரைவில் புதிய மாவட்ட நிர்வாக கட்டடம் கட்டும் திட்டம் உள்ளது,'' என்றார்.
தாலுகா அலுவலகத்துக்குள் குடை பிடித்தபடியும், மழை கோட் அணிந்தபடியும் வந்து செல்லும் பொது மக்கள். இடம்: பெலகாவி.

