பெங்களூரு நகர வளர்ச்சிக்கு 3 ஆண்டுகளில் 19 ஆயிரம் மரங்கள் வெட்டி சாய்ப்பு
பெங்களூரு நகர வளர்ச்சிக்கு 3 ஆண்டுகளில் 19 ஆயிரம் மரங்கள் வெட்டி சாய்ப்பு
ADDED : ஜூலை 05, 2026 10:26 PM

பெங்களூரு: மெட்ரோ ரயில் திட்டம், மேம்பாலம், சாலை அகலப்படுத்துதல் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளுக்காக பெங்களூருவில் கடந்த 3 ஆண்டுகளில் 19 ஆயிரம் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டு உள்ளன.
இது தொடர்பாக பெங்களூரு பெருநகர ஆணையம் சார்பில் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2023 முதல் தற்போது வரையில், பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்காக 7,683 மரங்கள் உட்பட மொத்தம் 19,268 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன.
மெட்ரோ ரயில் பணிகள், சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளுக்காக நகரம் பசுமையை இழந்துள்ளது.
இதே காலகட்டத்தில் 2,468 மரங்கள் ஆபத்தானவை அல்லது கட்டுமானத்திற்கு இடையூறாக உள்ளன எனக்கூறி தனி நபர்கள் வெட்டி உள்ளனர்.
ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்காரணமாக, பல்வேறு சொத்து உரிமையாளர்கள் மொத்தம் 7902 மரங்களை வெட்டி உள்ளனர். மேலும் 2025-26 காலத்தில் மாநகராட்சி அதிகாரிகளும் 1,215 மரங்களை வெட்டி உள்ளனர். பருவமழை காலத்தில் மரங்கள் ரோட்டில் விழுவதை தடுக்க அதனை வெட்டினர். இவ்வாறு 2023 மார்ச் முதல் 2026 ஜூன் வரை 19268 மரங்கள் வெட்டப்பட்டு உள்ளன.
இன்னும், 1902 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
