பத்ரிநாத் கோவில் காணிக்கை முறைகேடு: 3 பேர் அடங்கிய விசாரணை குழு அமைப்பு
பத்ரிநாத் கோவில் காணிக்கை முறைகேடு: 3 பேர் அடங்கிய விசாரணை குழு அமைப்பு
UPDATED : ஜூலை 08, 2026 04:16 PM
ADDED : ஜூலை 08, 2026 04:11 PM

சமோலி: உத்தரகண்டில், பத்ரிநாத் கோவில் காணிக்கை முறைகேடு குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் அடங்கிய குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. இது தொடர்பாக கோவில் நிர்வாகி ஒருவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
உத்தர பிரதேசத்தில், அயோத்தி ராமர் கோவிலின் நன்கொடைகளை கோவில் நிர்வாக ஊழியர்களே கையாடல் செய்தது, நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சூழலில், பா.ஜ., ஆளும் மற்றொரு மாநிலமான உத்தரகண்டில், சமோலி மாவட்டத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோவில் காணிக்கையிலும் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, கோவிலை நிர்வகிக்கும் பத்ரிநாத் - கேதார்நாத் கோவில் கமிட்டி உள்விசாரணை நடத்தி வருகிறது. நான்கு பேர் அடங்கிய குழு நடத்திய விசாரணையில், முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கோவில் கமிட்டியின் தனி செயலராக பணியாற்றிய பிரமோத் நவுட்டியால் என்பவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவுறுத்தலின்படி, கார்வால் கோட்ட போலீஸ் கமிஷனர் தலைமையில் மூன்று பேர் அடங்கிய உயர்மட்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 15 நாட்களுக்குள், இக்குழு அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும்.
அதனடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்கிடையே, ''மாநில அரசு அமைத்த விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை,'' என, உத்தரகண்ட் காங்., தலைவர் கணேஷ் கோடியால் தெரிவித்துள்ளார்.
