நமது மன்னர்களை இழிவுபடுத்தினார் ராகுல்: பிரதமர் மோடி தாக்கு
நமது மன்னர்களை இழிவுபடுத்தினார் ராகுல்: பிரதமர் மோடி தாக்கு
UPDATED : ஏப் 28, 2024 02:44 PM
ADDED : ஏப் 28, 2024 12:27 PM

பெலகாவி: ‛‛ நமது மன்னர்களை இழிவுபடுத்திய காங்கிரஸ் இளவரசர் நவாப்கள், நிஜாம்கள் செய்த அட்டூழியங்களை மறந்துவிட்டார்'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் பெலகாவியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: நமது ராஜாக்களும் பேரரசர்களும் இரக்கமற்றவர்கள் என காங்கிரஸ் இளவரசர் கூறியுள்ளார். ஏழைகளின் சொத்துகளை பறித்துக் கொண்டனர் எனவும் கூறியுள்ளார். சத்ரபதி சிவாஜி மற்றும் ராணி சென்னம்மாவை அவமானப்படுத்தி உள்ளார். ஆனால், அவர்களின் சிறந்த நிர்வாகமும் தேசப்பற்றும் நம்மை பெருமிதம் கொள்ளச் செய்யும். மைசூரு அரச குடும்பத்தினர் அளித்த பங்களிப்பு குறித்து அவருக்கு தெரியாதா?
கவலை
தனது ஓட்டு வங்கியை திருப்திபடுத்துவதற்காக காங்கிரஸ் இளவரசர் கவனமாக செயல்பட்டு உள்ளார். நவாப்கள், நிஜாம்கள், சுல்தான்கள் மற்றும் பாதுஷாக்கள் செய்த அட்டூழியங்கள் பற்றி ஒரு வார்த்தை கூட அவர் கூறவில்லை. நமது ஆயிரக்கணக்கான கோயில்களை அழித்த முகலாயப் பேரரசர் அவுரங்கசீப் செய்த மிக மோசமான செயல்களை காங்கிரஸ் மறந்துவிட்டது போல் தெரிகிறது. தனது ஓட்டு வங்கியை நினைத்து மட்டுமே அவர் கவலைப்படுகிறார்.
சதி
இந்தியா வலிமையுடன் வளர்ச்சி பெறும் போது மக்கள் அனைவரும் பெருமிதம் கொள்வர். ஆனால், காங்கிரஸ் நாட்டின் நலனில் இருந்து வெகுதூரம் விலகி சென்று விட்டது. நாட்டின் சாதனைகளை விரும்பாத வகையில் அக்கட்சி குடும்ப நலனில் மூழ்கி உள்ளது. இந்தியாவின் வெற்றி, சாதனையை பார்த்து காங்கிரஸ் வெட்கப்பட ஆரம்பித்துவிட்டது. நாட்டின் ஜனநாயகத்தை அழிக்க அக்கட்சி சதி செய்கிறது. இதற்காக மக்களிடம் அக்கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும்.
அட்டூழியங்கள்
ஆங்கிலேயர் கால சட்டங்களை பா.ஜ., அரசு நீக்கி உள்ளது. மத்திய அரசு கொண்டு வந்த புதிய சட்டத்தில் நமது மக்களுக்கு தண்டனையை விட நீதி கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். பயங்கரவாதம் தொடர்பான சட்டங்கள் வலுப்படுத்தப்பட்டு உள்ளதுடன், அட்டூழியங்களுக்கு எதிரான சட்டங்கள் வலிமையாக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது முதல் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது.
ஓட்டு வங்கி
ஹூப்ளியில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், மாநில அரசு சமரச அரசியலில் ஈடுபடுகிறது. நமது மகள்களின் உயிரைப் பற்றி மாநில அரசுக்கு கவலையில்லை. தங்களின் ஓட்டு வங்கி மீது மட்டுமே அவர்களுக்கு கவலையாக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

