கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு தினசரி வருமானம் ரூ.50 லட்சம்; சபரிமலை சீசனால் எகிறியது
கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு தினசரி வருமானம் ரூ.50 லட்சம்; சபரிமலை சீசனால் எகிறியது
ADDED : டிச 07, 2025 05:42 AM

சபரிமலை: சபரிமலை சீசனில்- கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் தினசரி வருமானம் 50 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
சபரிமலை வரும் பக்தர்களுக்காக கேரள அரசு போக்குவரத்து கழகம் விரிவான வசதிகளை செய்துள்ளது. பம்பை பஸ் ஸ்டாண்டில் இருந்து கேரளாவில் அனைத்து பகுதிகளுக்கும், தமிழகத்தின் கோவை, தென்காசி, பழநி, குமுளி போன்ற பகுதிகளுக்கும் பஸ்களை இயக்குகிறது.
தனியார் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வரும் பக்தர்கள் பம்பை செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. இவர்கள் நிலக்கல்லில் இறங்கி கேரளா அரசு பஸ்சில் பம்பை வரவேண்டும்.தரிசனம் முடிந்து பம்பை திரும்பியதும் செயின் சர்வீஸ் பஸ் மூலம் நிலக்கல் வந்து ஊருக்கு திரும்ப வேண்டும். இதற்காக நிலக்கல் --- பம்பை இடையே 180 பஸ்கள் தயார் நிலையில் உள்ளது.
கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 275 முதல் 300 பஸ்கள் பம்பை வருகிறது. இவற்றில் பெரும் பகுதி மத்திய கேரளா மற்றும் தெற்கு கேரளாவில் இருந்து வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். தேவைப்படும் பட்சத்தில் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பஸ்களை இயக்க தயாராக உள்ளதாக தெரிவித்தனர். நடப்பு சீசனில் கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் தினசரி வருமானம் சராசரியாக 50 லட்சம் ரூபாயாக உள்ளது. எந்தப் பிரச்னையும் இல்லாமல் பஸ்களை இயக்குவதற்காக 290 டிரைவர்கள், 250 கண்டக்டர்கள் பல்வேறு டிப்போக்களில் இருந்து இங்கு பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

