மம்தாவுக்கு பேரிடி: திரிணமுல் காங்கிரசின் ரூ.440 கோடியை முடக்கியது அமலாக்கத்துறை
மம்தாவுக்கு பேரிடி: திரிணமுல் காங்கிரசின் ரூ.440 கோடியை முடக்கியது அமலாக்கத்துறை
ADDED : ஜூலை 08, 2026 06:24 PM

கோல்கட்டா: திரிணமுல் காங்கிரஸ் வங்கிக் கணக்குகளில் உள்ள ரூ.440 கோடியை அமலாக்கத் துறை முடக்கி உள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளதாக அமலாக்கத்துறை அறிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் தோல்விக்கு பின்னர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது. கட்சிக்குள் நிலவும் உட்பூசல், முக்கிய நிர்வாகிகள் விலகல் உள்ளிட்ட விவகாரங்களில் அக்கட்சி சிக்கித் தவித்து வருகிறது.
திரிணமுல் காங்கிரசுக்கு 3 வங்கிக் கணக்குகள் இருக்கின்றன. இதன் மீதான பரிவர்த்தனைகளை முடக்கி வைக்க வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் அரூப் பிஸ்வாஸ் சம்பந்தப்பட்ட வங்கி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி இருந்தார்.
இப்படியான சூழலில், விமானங்களை வாடகைக்கு விடும் கேர்வேல் ஏவியேஷன் குழும நிறுவனங்களுக்குச் சொந்தமான 5 வளாகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
முதல்கட்ட விசாரணையில், 2023ம் ஆண்டு ஏப். முதல் 2026 ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் திரிணமுல் காங்கிரசில் இருந்து கேர்வெல் ஏவியேஷன் நிறுவனத்திற்கு ரூ.160 கோடி மாற்றப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதே நிறுவனம், 2023 மற்றும் 2026ம் ஆண்டுகளுக்கு இடையில் மேலும் ரூ. 82.96 கோடியை புதியதாக தொடங்கப்பட்ட மற்றொரு நிறுவனத்திற்கு பரிமாற்றம் செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் திரிணமுல் காங்கிரசின் ரூ.440 கோடி மதிப்பிலான வங்கிக்கணக்குகளை முடக்க அமலாக்கத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. பணமோசடி தடுப்புச் சட்டத்தின் பிரிவு 17(1/A)ன் கீழ் இந்த உத்தரவானது பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
