ஹர்திக் பாண்ட்யா அரைசதம்: தென் ஆப்ரிக்காவுக்கு 176 ரன் இலக்கு
ஹர்திக் பாண்ட்யா அரைசதம்: தென் ஆப்ரிக்காவுக்கு 176 ரன் இலக்கு
UPDATED : டிச 09, 2025 09:47 PM
ADDED : டிச 09, 2025 08:52 PM

கட்டாக்: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 175 ரன் குவித்தது.
தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்று கைப்பற்றிய தென் ஆப்ரிக்க அணி, ஒரு நாள் தொடரில் இந்திய அணியிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வி கண்டது. இந்நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி-20தொடர் இன்று தொடங்கியது.
இரு அணிகளுக்கிடையே முதலாவது டி-20 போட்டி, ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று நடக்கிறது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணி, பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் தொடங்கியது.
அதிர்ச்சி தந்த நிகிடி:
சுப்மன் கில் 2 பந்துகளை சந்தித்து ஒரு பவுண்டரி அடித்து,4 ரன்னில் நிகிடி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 11 பந்துகளில் ஒரு பவுண்டரி அடித்து 12 ரன்கள் எடுத்தபோது, நிகிடி பந்தில் ஆட்டமிழந்தார். நிதானமாக ரன்சேர்த்த அபிஷேக் சர்மா, ஒரு சிக்ஸர், 2 பவுண்டரிகள் உள்பட 17 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். 26(2பவுண்டரி, ஒரு சிக்ஸர்) ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்த திலக் வர்மா நிகிடி பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து அக்ஷர் பட்டேல் 23 ரன்களுக்கு சிபம்லா பந்தில் அவுட் ஆனார்.
ஹர்திக் பாண்ட்யா அதிரடி அரைசதம்:
ஹர்திக் பாண்ட்யா அதிரடியாக விளையாடி, ஆட்டமிழக்காமல் 59 ரன்கள் சேர்த்தார். இதில் 4 சிக்ஸர்களும், 6 பவுண்டரிகளும் அடங்கும். ஜிதேஸ் சர்மா ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் எடுக்க இறுதியில் இந்திய அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 175 ரன்கள் குவித்தது. தென் ஆப்ரிக்க அணியின், நிகிடி 3 விக்கெட்டுகளும், சிபம்லா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

