ஸ்ரீராமர் படம் அவமதிப்பு; வங்கதேசத்தில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
ஸ்ரீராமர் படம் அவமதிப்பு; வங்கதேசத்தில் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்
UPDATED : ஜூன் 20, 2026 03:43 PM
ADDED : ஜூன் 17, 2026 08:13 AM

டாக்கா:கடவுள் ஸ்ரீராமர் படத்தை அவமதித்த சம்பவத்தை கண்டித்து வங்கதேசத்தில் மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி போராட்டம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைபந்தாவின் பலாஷ்பாரி உபஜிலாவில் நாட்டின் மிகப்பெரிய ஸ்ரீ ராமர் சிலையை உருவாக்கும் திட்டத்தை நிறுத்தக்கோரி வங்கதேசத்தில் குறிப்பிட்ட சிலர் மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால், ஸ்ரீராமர் சிலை கட்டுமானப் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கைபந்தா பலாஷ்பாரி கோமர்பூர் ஸ்ரீ ஸ்ரீ ராதா கோவிந்தா கோவில் கமிட்டியின் நிறுவனரும், தலைவருமான ஹரிதாஸ் சந்திர தாஸ் கூறியதாவது; சனாதன தர்மத்தை பறைசாற்றுபவர்களில் ஒருவரான ஸ்ரீ ராமரின் சிலையை நாங்கள் இங்கு உருவாக்கி வருகிறோம். 81 அடி உயர சிலையில் சுமார் 80% பணிகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டன. ஆனால், சில பயங்கரவாத குழுக்கள், தற்போது கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறு எங்களை மிரட்டுகின்றன. நாங்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கிறோம். அந்த பயத்தின் காரணமாகவே தற்போது பணிகளை நிறுத்தி வைத்துள்ளோம். நாங்கள் இப்பணியை முழுமையாக முடிக்க ஏதுவாக, நாட்டின் பிரதமர் தாரிக் ரஹ்மான் மற்றும் அதிகாரிகள் எங்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும், என்று கோரிக்கை விடுத்தார்.
அதுமட்டுமில்லாமல், கைபந்தாவில் உள்ள ராதா-கோவிந்தா கோவிலை இடிக்கவும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். எனவே, ஸ்ரீராமர் சிலை கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வங்கதேசத்தில் உள்ள ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ரீ ராமரின் படம் அவமதிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டாக்கா பல்கலை மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர்.அதோடு, கைபந்தாவில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள ஸ்ரீ ராமர் சிலையின் கட்டுமானப் பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
டாக்கா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற ஜெகன்னாத் ஹால் மாணவர் சங்கத்தின் சமூக நலச் செயலாளர் ராம் பிரசாத் சஹா தோபு பேசுகையில், 'ஹிந்து மதத்தில் மிகவும் போற்றப்படும் தெய்வங்களில் ஸ்ரீ ராமரும் ஒருவர். சமீபத்தில் ஒரு தீவிரவாதக் குழு ஸ்ரீ ராமர் குறித்து வதந்திகளைப் பரப்பியது. அதனைத் தொடர்ந்து மற்றொரு தீவிரவாதக் குழு ஸ்ரீ ராமரின் படத்தை அவமதித்தது. இத்தகைய செயல்கள் ஒட்டுமொத்த ஹிந்து சமூகத்தின் மத உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளன,' என்று கூறினார்.'
