டில்லியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தான்
டில்லியில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தான்
ADDED : ஜூலை 08, 2026 06:56 PM

புதுடில்லி: டில்லியில் ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்டு, போலீஸ் ஸ்டேசன்களில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் சதி திட்டம் தீட்டியது அம்பலமாகி உள்ளது.
டில்லி மற்றும் பஞ்சாபில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு ஆதரவாக செயல்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதில் தெரியவந்துள்ளதாவது: கைதானவர்கள் , பாகிஸ்தானில் இருக்கும் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற ஷஜாத் பட்டியின் உத்தரவின் பேரில் செயல்பட்டு வந்துள்ளனர்.
போலீஸ் ஸ்டேசன்கள், ஆனந்த் விஹார் பஸ் முனையம், ரயில் நிலையம், மக்கள் கூட்டம் நிறைந்த சந்தைககளை நேரில் சென்று பார்வையிட்ட அவர்கள், அந்த பகுதிகளை மொபைல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளனர். அதனை, தடை செய்யப்பட்ட செயலி வாயிலாக ஷஜாத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். சமூக வலைதளம் வாயிலாக ஷஹாத்துடன் பேசி வந்துள்ளான்.
அப்போது, டானீஸ் என்பவனிடம் ஷஜாத், பொருள் வந்துள்ளதா எனக் கேட்டுள்ளான்.அதற்கு, டானீஸ் வந்துவிட்டது எனத் தெரிவித்துள்ளான். அந்த பொருட்களை பாதுகாப்பாக வைக்கும்படியும், மறு உத்தரவு வரும் வரை காத்திருக்கும்படி தெரிவித்துள்ளான்.
அதிகாரிகளின் கணிப்பின்படி, ஷஜாத் பொருட்கள் எனக்குறிப்பிட்டது பெட்ரோல் குண்டுகளாக இருக்கும் எனவும், அதன் மூலம் டில்லியில் அவர்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. மேலும் கைதானவர்கள், ஷஜாத் பட்டியின் ஆதரவாளர்கள் 10 பேருடன் தொடர்பில் இருந்துள்ளனர்.
டில்லியில் தாக்குதல் நடத்தும் பொறுப்பு டானீசுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதனை வெற்றிகரமாக நிறைவேற்றும் பட்சத்தில் 20 ஆயிரம் தருவதாகவும் ஷஜாத் உறுதி அளித்துள்ளான். இவ்வாறு அந்த தகவலில் தெரியவந்துள்ளது.
