வயநாடு நிலச்சரிவில் புதைந்தவர்களை மோப்ப நாய் உதவியுடன் தேடும் பணி தீவிரம்
வயநாடு நிலச்சரிவில் புதைந்தவர்களை மோப்ப நாய் உதவியுடன் தேடும் பணி தீவிரம்
ADDED : ஜூலை 09, 2026 03:11 AM

பந்தலுார்: கேரளாவின் வயநாடு அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதைந்த ஐந்து பேரை மோப்ப நாய்கள் உதவியுடன் தேடும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு, மேப்பாடி அருகே கல்லாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதனை ஒட்டிய மலைப்பகுதியில் நேற்று முன்தினம் மதியம் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
ஐந்து பேர் பலி
அங்கு பணியாற்றிய வடமாநில தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர். இதில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திரபான், பீகாரை சேர்ந்த பிகாஷ்குமார், ஜார்க்கண்டை சேர்ந்த அன்மோல் உட்பட ஐந்து பேர் பலியாகினர்.
மீட்கப்பட்ட ஏழு பேர் மேப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இவர்களைத் தவிர, மேலும் ஐந்து பேர் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், அவர்களை தேடும் பணி இரவு பகலாக தொடர்ந்து நடந்து வருகிறது.
மண் சரிவு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், மாநில பேரிடர் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர், போலீசார், வனத் துறையினர், தன்னார்வலர்கள் ஆகியோர் நான்கு குழுக்களாக பிரிந்து மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மீனாட்சி ஆற்றின் ஓரப்பகுதியில் மண் மற்றும் கற்களை அகற்றியும், மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் இடிபாடுகளை அகற்றியும் தேடுதல் பணி தொடர்கிறது.
இதற்கிடையே, 'நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்' என, காங்கிரசைச் சேர்ந்த கேரள முதல்வர் சதீசன் அறிவித்துள்ளார்.
